சிசேரியன் சர்ச்சை: டாக்டர் தம்பதி கைதுமகன் தலைமறைவு
திருச்சி:கர்ப்பிணிப் பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் சிறுவன் பிரசவம் பார்த்த சர்ச்சையில் சிக்கிய மணப்பாறை டாக்டர் முருகேசன் மற்றும் அவரது மனைவி டாக்டர் காந்திமதி ஆகியோரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில், 15 வயதே ஆகும் 11வது வகுப்பு படிக்கும் திலீபன் ராஜ் என்பவர் கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்ததாக அவரது தந்தை டாக்டர் முருகேசன் சமீபத்தில் டாக்டர்கள் சங்க கூட்டத்தில் அறிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கின்னஸ் சாதனைக்காக இந்த பிரசவத்தை திலீபன் ராஜ் பார்த்ததாக அவரது தந்தை கூறியது மேலும் அதிர்ச்சியைக் கூட்டியது. சிறுவனை விட்டுப் பிரசவம் பார்க்க வைத்த டாக்டர் தம்பதியை கைது செய்ய வேண்டும், அவர்கள் டாக்டர் தொழில் பார்க்க தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
![]() |
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆசிஷ் வச்சானி விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஆர்.டி.ஓ ரமணீதரன் தலைமையில் 3 அதிகாரிகள் கொண்ட குழு விசாரணையில் இறங்கியது.
கடந்த 3 நாட்களாக விசாரணை நடத்தப்பட்டது. அதில் டாக்டர் தம்பதி, திலீபன் ராஜ், பிரசவத்திற்கு வந்த பெண் நீலா, மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
இதுதவிர முருகேசனின் மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த பிரசவங்கள், சிசேரியன் அறுவைச் சிகிச்சை குறித்த விவரங்கள் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் சேகரித்தனர்.
பிரசவம் செய்து கொண்ட பெண்களிடமும் நேரில் போய் விசாரணை நடத்தப்பட்டது. கிட்டதட்ட 40க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்தது.
விசாரணையின் முக்கிய திருப்பமாக, திலீபன்ராஜ் சிசேரியன் செய்து, குழந்தையை வெளியே எடுப்பது போன்ற விசிடியையும் அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். விசாரணை அறிக்கையையும் அவர்கள் சமர்ப்பித்தனர்.
அதன் அடிப்படையில், டாக்டர் தம்பதியைக் கைது செய்யுமாறு ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று காலை முருகேசனும், காந்திமதியும் கைது செய்யப்பட்டனர்.
உடனடியாக வளநாடு காவல் நிலையத்திற்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு வைத்து அவர்களிடம் மணப்பாறை போலீஸார் வாக்குமூலம் பெற்று வருகின்றனர். இன்று மாலைக்குள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை அறிக்கையில் அதிகாரிகள் என்ன கூறியுள்ளனர் என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும் டாக்டர் தம்பதிகள் செய்த தவறு நிரூபிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் அதில் இணைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
திலீபன் ராஜ் தலைமறைவு
இதற்கிடையே, டாக்டர் தம்பதியின் மகனும், சிசேரியன் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளவருமான திலீபன் ராஜ் தலைமறைவாகி விட்டார். உறவினர்கள் யாருடைய வீட்டிலாவது அவர் பதுங்கியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications