துணை ராணுவப் பாதுகாப்புடன்நாளை மதுரை இடைத் தேர்தல்
மதுரை: மதுரை மேற்குத் தொகுதியில் நாளை இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குச் சாவடிகள் அனைத்தும் துணை ராணுவத்தினரின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. தொகுதி எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
மதுரை மேற்குத் தொகுதியில் நாளை நடைபெறவுள்ள இடைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதையடுத்து தொகுதிக்குச் சம்பந்தப்படாத அனைத்து அரசியல் கட்சியினரும் அங்கிருந்து வெளியேறினர்.
தொகுதியின் எல்லைப் பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அங்கு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
6 கம்பெனி துணை ராணுவப் படையினரும், 2500 போலீஸாரும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாளை காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை இடைவிடாமல் வாக்குப் பதிவு நடைபெறும்.
216 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே பதட்டம் நிறைந்தவையாகவும், சில வாக்குச் சாவடிகள் மிகப் பதட்டமானவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே தொகுதி முழுவதும் மிக பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
மொத்தம் 1 லட்சத்து 56 ஆயிரத்து 182 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இவர்களில் பெண்கள் 78 ஆயிரத்து 671 பேர் ஆவர். ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ள ஓட்டுப் போட வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் கூறியுள்ள 11 புகைப்பட ஆவணங்களில் ஏதாவது ஒன்றுடன் வருவோர் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
தமிழகத்தில், மத்திய துணை நிலை ராணுவப் படையின் பாதுகாப்புடன் இடைத் தேர்தல் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் துணை நிலை ராணுவப் படையினர் நிறுத்தப்படவுள்ளனர். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்குச் சாவடிக்குள்ளும், வாக்குப் பதிவு மையத்திற்குள்ளும் தமிழக போலீஸார் நுழையக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல்துறை ஆணையர் சஞ்சீவ் குமார் கூறுகையில், வாக்குச் சாவடிகளிலிருந்து 100 மீட்டருக்கு அப்பால் மட்டுமே தமிழக போலீஸார் செயல்படுவர். அவர்களுக்கு சட்டம் ஒழுங்குப் பாதுகாப்புப் பணியை மட்டுமே தேர்தல் ஆணையம் கொடுத்துள்ளது.
வாக்காளர்கள் வரிசையில் நிற்பதைக் கூட துணை ராணுவப் படையினர்தான் ஒழுங்குபடுத்துவார்கள். போலீஸார் அதில் தலையிட மாட்டார்கள்.
வாக்குப் பதிவு மையத்தின் அதிகாரி உத்தரவிட்டால் மட்டுமே மாநில போலீஸார் வாக்குச் சாவடிக்குள் நுழைய முடியும் என்றார்.
மதுரை மாநகரில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விடுதிள், திருமண மண்டபங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications