அமெரிக்க அணு ஆயுத கப்பல்சென்னைக்கு வர கடும் எதிர்ப்பு
சென்னை:
சென்னைக்கு வரவுள்ள அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த அணு ஆயுத கப்பலால் சென்னை நகருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அதை அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை எழுந்துள்ளது.
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யுஎஸ்எஸ் நிமிட்ஸ் என்ற ராட்சத கப்பல் ஜூலை 1ம் தேதி சென்னைக்கு வரவுள்ளது. உலகில் உள்ள மிகப் பிரமாண்டமான அணு சக்தி போர்க் கப்பல்களில் இதுவும் ஒன்று.
![]() |
1975ம் ஆண்டு செயல்படத் தொடங்கிய இந்தக் கப்பல் 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்ட கப்பல் ஆகும். இந்தக் கப்பலில் 75 விமானங்களை நிறுத்தி வைக்க முடியும்.
மணிக்கு 30 கடல் மைல் வேகத்தில் இந்தக் கப்பல் பயணிக்கும். கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த ஈராக் போரின்போது இந்தக் கப்பலிலிருந்துதான் அமெரிக்க விமானங்கள் ஈராக்கைத் தாக்கி வந்தன.
இந்தக் கப்பலில் 2 அணு உலைகள் உள்ளன. அணு சக்தியின் மூலம் இந்தக் கப்பல் இயங்குகிறது. இந்தக் கப்பல் சென்னைக்கு வருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து துறைமுக ஊழியர்கள் மற்றும் நீர் போக்குவரத்துப் பணியாளர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் நரேந்திர ராவ் கூறுகையில், இந்தக் கப்பலுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் பெருமளவில் கதிர் வீச்சு ஏற்படும். அதனால் சென்னை நகரம் முழுமையாக அழிந்து போய் விடும். அது மட்டுமல்லாமல் பக்கத்தில் உள்ள தென் மாநிலங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றார்.
இந்த ஆபத்தை விவரித்து அமெரிக்க அணு சக்தி கப்பலை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கோரி மத்திய அமைச்சரவைச் செயலாளர், கப்பல் துறை செயலாளர், சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் ஆகியோருக்கு நரேந்திர ராவ் கடிதம் எழுதியுள்ளார்.
துறைமுகத்தில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறைமுக பொறுப்புக் கழகம் உத்தரவிட்டுள்ளது. இந்திய அணு சக்தி கமிஷனிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருந்துகள், தடுப்பு சாதனங்கள், டாக்டர்கள் குழு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சென்னைக்கு வரும் இக்கப்பல் 4 நாட்கள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பயங்கர ஆயுதங்கள், அணு உலைகளுடன் வரும் இந்த அமெரிக்கக் கப்பலால் சென்னை துறைமுகத்தில் பெரும் பீதி நிலவுகிறது.













Click it and Unblock the Notifications