ஜெ. மீது வழக்கு: தேர்தல் ஆணையம் உத்தரவு
டெல்லி:நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட இரு தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்போது ஜெயலலிதா விதிமுறைகளுக்குப் புறம்பாக கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை, ஆண்டிப்பட்டி என நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி திமுக எம்.பி செ.குப்புசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தல் அதிகாரிகளிடம் பொய்யான தகவல்களைக் கூறி நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இதைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம் தற்போது இதுதொடர்பான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கடைசியாக அவர் வேட்பு மனு தாக்கல் செய்த புவனகிரி மற்றும் புதுக்கோட்டை தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள், ஜெயலலிதா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 6 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications