அமெரிக்க அணு சக்தி கப்பலுக்கு ஜெ. எதிர்ப்பு
சென்னை:
அணு சக்தியின் மூலம் இயங்கும் அமெரிக்க கடற்படை போர்க் கப்பலான, யுஎஸ்எஸ் நிமிட்ஸை, சென்னை துறைமுகம் அருகே நிறுத்த அனுமதிக்கக் கூடாது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த போர்க் கப்பல் யுஎஸ்எஸ் நிமிட்ஸ். அணு சக்தியின் மூலம் இந்த பிரமாண்ட போர்க் கப்பல் இயக்கப்படுகிறது. இக்கப்பல் உலகின் மிகப் பிரமாண்ட அணு சக்திக் கப்பல்களில் ஒன்றாகும்.
தற்போது இக்கப்பல் 6,000 வீரர்கள், ஊழியர்களோடு சென்னைக்கு வரவுள்ளது. வருகிற ஜூலை 1ம் தேதியிலிருந்து நான்கு நாட்கள் சென்னை துறைமுகம் அருகே இந்தக் கப்பல் நிறுத்தப்படவுள்ளது.
இந்தக் கப்பல் சென்னையில் நிறுத்தப்படுவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கப்பலிலில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு, கதிர்வீச்சு வெளிப்பட்டால் ஒட்டுமொத்த சென்னை நகரம் மட்டுமல்லாது தென் மாநிலங்கள் முழுவதும் அழிந்து விடும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் நிமிட்ஸ், சென்னைக்கு வர எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், உலகின் பெரிய அணு சக்தி கப்பல்களில் ஒன்றான யுஎஸ்எஸ் நிமிட்ஸ் 5 நாட்கள் சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.
இது மிகவும் ஆபத்தான விஷயம். இதனால் சென்னை மக்களுக்கு அணுகதிர் வீச்சு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதை சாதாரணமாக கருதி விடக் கூடாது. ஏற்கனவே நீர்வழி போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த கப்பலின் ஆபத்தை கருதி ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகள், தங்கள் நாட்டு கடற்பகுதிக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளன.
பல வருடங்களாக இதுபோல் கப்பல்கள் வந்ததுள்ளன. பாதுகாப்பு தொடர்பான கூட்டு ஒத்துழைப்புதான் இது என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
எனவே யுஎஸ்எஸ் நிமிட்ஸ் அணுசக்தி கப்பல் இந்திய கடற்பகுதிக்குள் நிறுத்த மத்தியஅரசு அனுமதி வழங்கக் கூடாது. அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications