வன்முறையின்றி, அமைதியாக முடிந்தமதுரை இடைத் தேர்தல்: 65% வாக்குப் பதிவு
மதுரை:மதுரை மேற்குத் தொகுதியில், விறு விறுப்பாக நடந்து வந்த வாக்குப் பதிவு இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியதும், வாக்காளர்கள் வாக்களிக்க ஆரம்பித்தனர்.
காலை முதலே வாக்குச் சாவடிகளில் அதிக அளவில் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். தொகுதி முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 216 வாக்குச் சாவடிகளிலும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்
தமிழகத்தில், ஒரு தேர்தலில், வாக்குச் சாவடியில் முழுக்க மழுக்க துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். பீகார், உ.பி. போன்ற வட மாநிலங்களில்தான் இதுபோல உள்ளூர் போலீஸாரை ஒதுக்கி வைத்து விட்டு, துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் பயமின்றி வாக்களிப்பதற்காக தொகுதி முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். சட்டம் ஒழுங்கை காக்கும் பணியில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
மிக பதட்டமானதாக அறிவிக்கப்பட்டிருந்த 25 வாக்குச் சாவடிகளில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா மதுரையில் முகாமிட்டு இடைத் தேர்தல் வாக்குப் பதிவை கண்காணித்து வந்தார். செல்லூர், மதிச்சியம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிகளை அவர் பார்வையிட்டார்.
அதேபோல, தேர்தல் பார்வையாளர்கள் அஜய் தியாகி, கணேஷ் ராவ், சிவசங்கர், ஆட்சித் தலைவர் சுந்தரமூர்த்தி, மாநகர ஆணையர் சஞ்சீவ் குமார், ஆகியோர் வாக்குப் பதிவு நடைபெறும் மையங்களுக்குச் சென்று பார்வையிட்டனர்.
அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜு, காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் தங்களது பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் ஓட்டுப் போட்டனர்.
ஓட்டுப்பதிவு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சுந்தரமூர்த்தி கூறுகையில், வாக்குப்பதிவு மிக மிக அமைதியாக நடந்து வருகிறது. இதுவரை எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் அவரவருக்குக் கொடுக்கப்பட்ட பணியை சீராக செய்து வருகின்றனர் என்றார்.
திமுக-அதிமுக தொண்டர்கள் மோதல்
வாக்குப் பதிவு பொதுவாக அமைதியாக இருந்தது. இருப்பினும் ஆரப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு நிலவரம் குறித்து அறிவதற்காக மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெயராமன் வந்தார்.
அப்போது அங்கிருந்த திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே மோதல் மூண்டது. அப்போது ஜெயராமன் தாக்கப்பட்டார். அவரது தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸார் தலையிட்டு இரு தரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர். ஆனால் திமுகவினரைக் கைது செய்யாமல் அப்படியே விட்டு விட்டதாக அதிமுகவினர் புகார் கூறினர்.
இதேபோல, மருத்துவக் கல்லூரிக்கு எதிரே உள்ள மாநகராட்சி இளங்கோ மேல் நிலைப்பள்ளியில் திமுகவினர் கள்ள ஓட்டுப் போடுவதாக தகவல் வந்தது. இதையடுத்து அதிமுகவினர் வேட்பாளர் செல்லூர் ராஜு தலைமையில் அங்கு விரைந்தனர்.
உள்ளே சென்று கள்ள ஓட்டுப் போடுபவர்களைத் தடுக்க முயன்றனர். பின்னர் நரேஷ் குப்தாவுக்குத் தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர் விரைந்து வந்தார். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கள்ள ஓட்டுக்களை யாரும் போடாமல் தடுக்க அவர் நடவடிக்கை எடுத்து விட்டுச் சென்றார்.
காலை முதல் மாலை வரை படு விறுவிறுப்பாக நடந்து வந்த வாக்குப் பதிவு மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. 5 மணிக்குள் வாக்குச் சாவடி மையத்திற்குள் நுழைந்து விட்டவர்கள் மட்டும் டோக்கன் கொடுக்கப்பட்டு வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இன்றைய இடைத் தேர்தலில் சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications