கம்போடிய விமானம் விழுந்து 22 பேர் பலி
நாம்பென்:கம்போடிய விமானம் ஒன்று மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 22 பேரும் உயிரிழந்தனர்.
ஞாயிற்றுக்கிழமையன்று கம்போடியாவின் சியம் ரீப் என்ற இடத்திலிருந்து சிஹானுக்வில்லி என்ற இடத்திற்கு இந்த விமானம் சென்று கொண்டிருந்தது. விமானம் புறப்பட்டு சில நிமிடங்களிலேயே ரேடாரிலிந்து மறைந்தது.
விமானத்துக்கும், தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திற்கும் இடையிலான தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து விமானத்தைக் கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
இந்த நிலையில் போகோர் மலைப் பகுதியில் விமானம் விழுந்து கிடப்பது தெரிய வந்தது. இதையடுத்து மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. விமானத்தில் இருந்த 22 பேரும் உயிரிழந்து விட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து கம்போடிய செய்தித்துறை அமைச்சர் கியூ கன்ஹாரித் கூறுகையில், விபத்தில் இறந்தவர்களில் 13 பேர் தென் கொரிய சுற்றுலாப் பயணிகள் ஆவர். 3 பேர் செக் நாட்டையும் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் விமான ஊழியர்கள்.
விபத்துக்கான காரணம் தெரியவில்லை. விமானத்தின் பிளாக் பாக்ஸை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நாசவேலை எதுவும் விபத்துக்குக் காரணமாக இருக்க முடியாது என்று கம்போடிய அரசு கூறியுள்ளது.
மோசமான வானிலை காரணமாகவே விமானம் விபத்தில் சிக்கியிருக்க முடியும் என்று கருதப்படுகிறது. மலையின் உச்சியில் விமானத்தின் சிதறல்கள் கிடந்தன. அங்கு மரங்கள் அடர்ந்து காணப்படுவதால் மீட்புப் பணிகளில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் கம்போடியாவில் நடந்த மோசமான விமான விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications