சென்னையில் மீண்டும் ரவுடிகள் வேட்டை
சென்னை: கொலை நகரமாகி வரும் சென்னையில் மீண்டும் போலீஸார் ரவுடிகளை வேட்டையாட ஆரம்பித்துள்ளனர்.
சென்னை நகரில் சமீப காலமாக தினசரி ஒரு கொலை என்ற விகிதாச்சாரத்தில் அடிக்கடி கொலைகள் நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதி நிலவுகிறது.
கொலை தவிர கொள்ளை, வழிப்பறி ஆகிய சம்பவங்களும் அதிகரித்தவண்ணம் உள்ளன. இதையடுத்து சமீபத்தில் ரவுடிகளைப் பிடிக்கும் நடவடிக்கையில் போலீஸார் குதித்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். பின்னர் ரவுடி வேட்டை குறைந்தது.
இந்த நிலையில், சென்னை நகரில் திருட்டு, வன்முறை அதிகரிப்பதை தடுக்கும் பொருட்டு பழைய ரவுடிகளை பிடிக்க காவல்துறை ஆணையர் லத்திகா சரண் உத்தரவிட்டார்.
இதையடுத்து போலீஸார் ரவுடிகளைப் பிடிக்கும் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர். இதுவரை 1000க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்தனர்.
இதன் பின்னரும் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பதால் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, கைதாகாமல் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளின் பட்டியலை அந்தந்த பகுதி போலீஸார் தயாரித்து அவர்களை தேட வேண்டும் என லத்திகா சரண் உத்தரவிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து தலை மறைவு குற்றவாளிகள் பட்டியல் தயாரிக்கும் பணி, வட சென்னை இணை ஆணையர் ரவி, தென் சென்னை இணை ஆணையர் துரைராஜ், மத்திய சென்னை இணை ஆணையர் பாலசுப்ரமணியம் ஆகியோர் மேற்பார்வையில் நடந்து வருகிறது.
இந்தப் பட்டியலின் அடிப்படையில், வடசென்னையில் 27 பேரும், மத்திய சென்னையில் 51 பேரும், தென் சென்னையில் 24 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து ரவுடிகளை தேடும் பணி நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications