கோவிலில் நுழைந்த முஸ்லீம் எம்.எல்.ஏ:தீட்டுப் பட்டு விட்டதாக பாஜக அலறல்
ராமேஸ்வரம்:காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஹசன் அலி, ராமேஸ்வரம் கோவிலுக்குள் நுழைந்ததால் கோவிலின் புனிதத் தன்மை கெட்டு விட்டது என்று பாஜக பிரச்சினை கிளப்பியுள்ளதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
எம்.எல்.ஏ. ஹசன் அலி கடந்த 11ம் தேதி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவிசந்திரராம வன்னியுடன் சென்றிருந்தார்.
இதை பாஜக பிரச்சினையாக்கியுள்ளது. இந்து மதத்தைச் சாராதவர்கள் 3ம் பிரகாரத்திற்கு மேல் செல்லக் கூடாது என கோவில் விதி கூறுகிறது. ஆனால் அதை மீறி ஹசன் அலி நடந்து கொண்டுள்ளார். இதனால் கோவிலின் புனித தன்மையை அலி கெடுத்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக கோரியுள்ளது.
ஹசன் அலி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேஸ்வரம் முழுவதும் சுவரொட்டிகளையும் அது ஒட்டியுள்ளது. இதனால் ராமேஸ்வரத்தில் பதட்டம் நிலவுகிறது.
இதுகுறித்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளிதரன் கூறுகையில், ராமேஸ்வரம் கோவிலில் 3ம் பிரகாரத்திற்கு மேல் இந்து சமயத்தைச் சேராதாவர்கள் செல்லக் கூடாது என்பது விதிமுறை.
சில ஆண்டுகளுக்கு முன் ஜனாதிபதி அப்துல் கலாம் இந்த கோவிலுக்கு வந்தபோது 3ம் பிரகாரத்தில் வழிபட்டாலும் கருவறைக்குள் செல்ல மறுத்து விட்டார்.
ஆனால் ஹசன் அலி விதிமுறைகளை மீறி கோவிலுக்குள் சென்றது சரியல்ல என்றார்.
ஆனால் இந்தப் புகாரை ஹசன் அலி மறுத்துள்ளார். அவர் கூறுகையில், நான் முஸ்லீம் மட்டும் அல்ல, மக்களின் பிரதிநிதியும் கூட. கோவில் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்யவே நான் கோவிலுக்குள் சென்றேன்.
இதற்கு முன்பு கோவிலில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நான் சென்றுள்ளேன். அப்போதெல்லாம் பிரச்சினை எழுப்பாத பாஜக இப்போது சர்ச்சையைக் கிளப்புவது வியப்பாக உள்ளது.
கடந்த காலங்களில் நடந்த சமபந்தி நிகழ்ச்சியில் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று கலந்து கொண்டிருக்கிறேன். தரிசனமும் செய்திருக்கிறேன் என்றார்.
ஹசன் அலியுடன் கோவிலுக்குள் சென்ற மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவிசந்திர ராமவன்னி தெரிவிக்கையில், இந்து மதம் சகிப்பு தன்மை கொண்டது. ராமேஸ்வரம் கோவிலுக்கு இன்னார் தான் செல்லவேண்டும் என்றில்லை. யார் வேண்டுமானாலும் செல்லலாம்.
பாஜக தேவையில்லாமல் இதை அரசியலாக்க நினைக்கிறது. கோவிலின் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை பார்க்கவே ஹசன்அலி கோவிலுக்கு வந்தார் என்றார்.
ஹசன் அலி வந்து சென்றதால் தீட்டு ஏற்பட்டு விட்டதாகவும், இதனால் கோவிலில் பரிகார பூஜை நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இதை கோவில் அர்ச்சகர்கள் மறுத்துள்ளனர்.
பல மதத்தினரும் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். எம்எல்ஏ ஹசன்அலி சமபந்தி போன்ற பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அவர் வந்து போனதற்காக பரிகார பூஜை எதுவும் நடத்தப்படவில்லை என்றனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவரான ஜனாதிபதி அப்துல் கலாம் தனது இளம் வயது முதலே இக் கோவிலுக்கு பலமுறை சென்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications