இது செயற்கையான வெற்றி, வருத்தப்படாதீங்க-ஜெ
சென்னை:
மதுரை மேற்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்துள்ள வெற்றி செயற்கையானது. திமுகவினர் அராஜகம், அதிகார துஷ்பிரேயாகம் செய்து வாங்கிக் கொடுத்த வெற்றி இது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மதுரை மேற்குத் தொகுதி தேர்தல் முடிவு தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை
இது எதிர்பார்த்த முடிவுதான். இப்போது வந்திருப்பது மக்கள் தீர்ப்பு அல்ல, திமுகவினரின் திட்டமிட்ட சதி. தேர்தல் நியாயமாக, நேர்மையாக நடக்காது, நடக்க முடியாது என்பதை உணர்ந்துதான் தலைமைத் தேர்தல் ஆணையரே தேர்தலை ரத்து செய்ய முடிவு செய்தார்.
இதனால்தான் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா டெல்லிக்கு அழைக்கப்பட்டார்.
தேர்தல் ரத்து செய்யப்படும் அல்லது ஒத்தி வைக்கப்படும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து கொண்டுதான், தேர்தலை நடத்தியே தீர வேண்டும் என்று வற்புறுத்தினார் கருணாநிதி.
தேர்தல் ரத்தானால் அல்லது ஒத்திவைக்கப்பட்டால், சட்டம் ஒழுங்கு நிலை சரியில்லை என்பது பட்டவர்த்தனமாக நிரூபணமாகி விடும் என்பதால்தான், தேர்தலை நடத்தாவிட்டால், தேர்தல் ஆணையம் முன் உண்ணாவிரதம் இருப்பேன் என்று மிரட்டினார் கருணாநிதி.
அவரது வற்புறுத்தலால், சோனியாவும் இதில் தலையிட்டு தேர்தல் ஆணையத்திற்கு நெருக்கடி கொடுத்தார். இதை விட உச்சமாக மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமைத் தேர்தல் ஆணையரையே நேரில் சென்று மிரட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தில் 3 பேர் கொல்லப்பட்டதால் மதுரை மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.
இந் நிலையில் காங்கிரஸ் வேட்பாளரை மதுரை மக்கள் தோற்கடித்து விட்டால், அதற்கு தானே பொறுப்பேற்க வேண்டி வரும் என்பதால் மு.க.அழகிரி, ரவுடிகள் பட்டாளத்துடன் நேரடியாக களத்தில் இறங்கினார்.
அழகிரியின் கட்டுப்பாட்டில் அரசு இயந்திரம் கெட்டுப் போய் இருப்பதால்தான் தேர்தலை நடத்த முடியாது என்ற முடிவுக்கு தேர்தல் ஆணையம் வந்தது. ஆனால் பின்னர் அந்த முடிவை மாற்றிக் கொண்டதன் ரகசியம் என்ன?, பின்னணியில் என்ன நடந்தது?.
இந்தத் தேர்தலில் சதியும், சூதும், சூழ்ச்சியும், அதிகார துஷ்பிரயோகமும், அராஜகமும் வென்று விட்டன.
அதிமுகவினர் யாரும் இந்த தோல்வியால் மனம் தளர வேண்டாம். சோர்வடைய வேண்டாம். ஏனெனில் இது உண்மையான தோல்வி அல்ல, செயற்கையான முடிவு. அதிமுகவுக்கு நிச்சயமான, ஒளிமயமான எதிர்காலம் உண்டு. தோல்வியை நினைத்து வருத்தப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications