கர்நாடகத்தில் நாளை முதல் லாரி ஸ்டிரைக்தமிழக லாரிகளும் முடங்கும்-பல கோடி நஷ்டம்
நாமக்கல்:கர்நாடகத்தில் நாளை முதல் லாரி ஸ்டிரைக் நடக்கவுள்ளது. இதனால் கர்நாடகம் செல்லும் தமிழக லாரிகளும், கர்நாடகம் வழியாக வட மாநிலங்களுக்குச் செல்லும் தமிழக லாரிகளின் போக்குவரத்தும் பாதிக்கப்படும்.
கர்நாடகத்தில் வரும் 1ம் தேதி முதல் அனைத்து கன ரக வாகனங்களிலும் வேகத்தைக் கட்டுப்படுத்தும் கருவி பொருத்த வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு கர்நாடக லாரி உரிமையாளர் சம்மேளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை திரும்ப பெற கோரி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தவுள்ளனர்.
மேலும் கர்நாடகத்திற்கு வரும் வெளி மாநில லாரிகளுக்கும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கர்நாடக லாரி உரிமையாளர்களின் போராட்டத்திற்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழரகத்திலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு லாரிகளை இயக்க வேண்டாம் என தமிழக லாரி உரிமையாளர் சம்மேளனம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் லாரி உரிமையாளர் சங்க செயலாளர் நல்லதம்பி கூறுகையில்,
கர்நாடக மாநிலத்தில் வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு லாரி உரிமையாளர்கள் நாளை முதல் ஸ்டிரைக் செய்வோம் என அறிவித்துள்ளனர்.
தமிழகத்திலிருந்து தினமும் 10,000 சரக்கு லாரிகள் வட மாநிலங்களுக்கு கர்நாடகா வழியாக செல்ல வேண்டும். கர்நாடகாவில் லாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக் செய்யப்படும் என்ற அறிவிப்பால் தமிழகத்திலிருந்து சரக்கு லாரிகள் வட மாநிலங்களுக்கு செல்வதில் தடை ஏற்படும்.
இதனால் துணிகள், மஞ்சள், வெங்காயம் போன்ற பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் தினமும் ரூ.100 கோடி அளவுக்கு சரக்குகள் தேக்கம் அடையும் நிலை ஏற்படும்.
கர்நாடக அரசின் உத்தரவால் லாரி தொழிலே முழுமையாக பாதிக்கப்படும். இதனால் இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications