எம்.எல்.ஏவாக பதவியேற்றார் ராஜேந்திரன்
சென்னை:
மதுரை மேற்குத் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் கே.எஸ்.கே.ராஜேந்திரன் இன்று எம்.எல்.ஏவாக பதவியேற்றுக் கொண்டார்.
மதுரை மேற்கு சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கே.எஸ்.கே.ராஜேந்திரன், திமுகவின் துணையுடன் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.
இதையடுத்து நேற்று சென்னை வந்த அவர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது வெற்றிக்குக் காரணமான மு.க.அழகிரியும் உடன் இருந்தார்.
இதைத் தொடர்ந்து இன்று அவர் எம்.எல்.ஏவாகப் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். சபாநாயகர் ஆவுடையப்பனின் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜேந்திரனுக்கு சபாநாயகர் அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மத்திய அமைச்சர்கள் ராஜா, ரகுபதி, காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணாமி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், துணை சபாநாயகர் என்.பி. துரைசாமி, பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
பின்னர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரை மேற்குத் தொகுதியின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக பணியாற்றுவேன். மத்திய, மாநில அரசுகளின் துணையுடன் தொகுதி மக்களுக்காக பாடுபடுவேன்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். செல்லூர் போன்ற பள்ளமான பகுதிகளில் மழைக் காலங்களில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்க தகுந்த நடவடிக்கை எடுப்பேன்.
தொகுதியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முன்னுரிமை கொடுப்பேன் என்றார் ராஜேந்திரன்.












Click it and Unblock the Notifications