ஜனாதிபதி தேர்தலில் 84 மனுக்கள் தாக்கல்
டெல்லி:
குடியரசுத் தலைவர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 84 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது.
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வந்தது. நேற்று மாலையுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது.
மனுத் தாக்கல் முடிவைடந்த போது மொத்தம் 84 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதுவரை குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்த அளவுக்கு வேட்பு மனுக்கல் தாக்கலானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று மட்டும் 33 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் பிரதீபா பாட்டீல் சார்பில் கூடுதலாக தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களும் அடங்கும்.
நேற்று தாக்கலான 33 மனுக்களில் 20 மனுக்கள் உரிய முறையில் இல்லாததால் உடனடியாக தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.
இதுவரை மொத்தம் 37 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நாளை மீதமுள்ள வேட்பு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
பிரதீபா மேலும் 2 வேட்பு மனு தாக்கல்:
இந் நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரதீபா பாட்டீல், மேலும் 2 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் இத்தகவலை பிரதீபாவின் தேர்தல் நிர்வாகியும், மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சருமான பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி கூறினார். அவர் கூறுகையில், பிரதீபா பாட்டீலின் வேட்பு மனுவை 265 எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் முன் மொழிந்துள்ளனர். 275 எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் வழி மொழிந்துள்ளனர்.
லட்சத் தீவைத் தவிர மற்ற அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் இதில் அடங்குவர்.
பிரதீபாவின் முதல் கட்டப் பிரசாரம் சென்னையில் தொடங்குகிறது. 2வது கட்டப் பிரசாரம் ஜூலை மாதத்தில் தொடங்கும்.
பிரதீபா பாட்டீல் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்திற்கும், அவருக்கும் தொடர்பு இல்லை. பிரதீபா மகளிர் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்தபோது அந்த வங்கியின் தலைவராகவோ அல்லது இயக்குநராகவே பிரதீபா பாட்டீல் இல்லை.
இந்த வங்கி விவகாரம் தொடர்பான வழக்கி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது பரிசீலனைக்கு வந்தது. அப்போது ரிசர்வ் வங்கி கொடுத்த அறிவுரைப்படியே முடிவெடுத்தனர். பிரதீபா வங்கிக்கு எதிராக எந்தவிதமான கருத்தையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தெரிவிக்கவில்லை.
அது மட்டுமல்ல, ராஜஸ்தான் மாநில ஆளுநராக பிரதீபா பாட்டீல் பதவியேற்றபோது தேசிய ஜனநாயகக் கூட்டணியோ அல்லது பாஜகவோ எந்தவித அதிருப்தியையும், ஆட்சேபத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் இப்போது பிரச்சினையைக் கிளப்புவது குடியரசுத் தலைவர் தேர்தலை அரசியலாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் என்பது தெளிவாகியுள்ளது என்றார் முன்ஷி.












Click it and Unblock the Notifications