விமான நிலையத்தில் ரகளை செய்த மதிமுக எம்பி
சென்னை:சென்னை விமான நிலையத்தில் மதிமுக எம்பி சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், தன்னுடன் வந்தவர்களையும் விஐபி கவுண்டர் வழியாக விடவேண்டும் என ரகளை செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று முன் தினம் நள்ளிரவு பாங்காங் செல்லும் தாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்வதற்காக சிவகாசி தொகுதி மதிமுக எம்பி சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். அவருடன் பெண் உள்பட 3 பேர் வந்திருந்தனர்.
அப்போது எம்பிக்கு சிறப்பு குடியுரிமை சோதனை நடத்தப்பட்டது. எம்பி தன்னுடன் வந்தவர்களையும் சிறப்பு கவுண்டர் வழியாக அழைத்து வந்தார். ஆனால் அங்கிருந்த குடியுரிமை அதிகாரிகள் அதை ஏற்கவில்லை.
இதனால் எம்பி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் அதிகாரிகள் எம்பியுடன் வந்திருந்தவர்களை சிறப்பு கவுண்டர் வழியாக செல்லவும் அங்கு வைத்து சோதனை நடத்தவும் மறுத்தவிட்டனர்.
என்னுடன் வந்தால்தான் அவர்களும் விஐபிதான். அவர்களையும் சிறப்பு கவுண்டர் வழியாக அனுமதிக்க வேண்டும் என எம்பி தொடர்ந்து தகராறு செய்தார்.
குடியுரிமை அதிகாரிகள், நீங்கள் எம்பி என்பதால் சிறப்பு கவுண்டரில் அனுப்புகிறோம். ஆனால் உங்களுடன் வந்தவர்கள் சாதாரண பயணிகள் செல்லும் வழியாகத்தான் செல்ல வேண்டும். இதை மீறி நீங்கள் தகராறில் ஈடுபட்டால் உங்கள் மீது புகார் கொடுக்க வேண்டிய இருக்கும் என்றனர்.
இதையடுத்து அவர்கள் பிற பயணிகள் செல்லும் வழியில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையடுத்து எம்பி ரவிசந்திரன், என்னை அவமதித்த உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பேசுவேன் என எச்சரித்துவிட்டுப் போனாராம்.












Click it and Unblock the Notifications