என்ஜீனியர் பாலாவின் மனைவி தற்கொலை
சிவகங்கை:சிவகங்கையில் நகராட்சித் தலைவர் முருகன் கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டது தொடர்பாக தேடப்பட்டு வந்த என்ஜீனியர் பாலாவின் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இதனால் சிவகங்கையில் மேலும் பரபரப்பு கூடியுள்ளது.
சிவகங்கை நகரம் இதுவரை கண்டிராத அளவுக்கு அங்கு அடுத்தடுத்து பயங்கர சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த 29ம் தேதி கார் குண்டு மூலம் நகராட்சித் தலைவர் முருகன் கொலை செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தில் இப்படி ஒரு பயங்கர கொலை சம்பவம் நடந்ததில்லை என்பதால் மக்கள் பெரும் பீதியடைந்தனர்.
காரில் வைக்கப்பட்ட குண்டு குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டது. அதில், டிரைநைட்ரோ டெலிகான் என்ற குண்டுதான் காரில் பயன்படுத்தப்பட்டது என்று தெரிய வந்தது. இந்த வெடிமருந்து சாதாரணமாக கிடைத்து விடாது. பெரிய நகரங்களில் உள்ள ஒரு சில கடைகளில்தான் கிடைக்கும்.
![]() |
மேலும் இந்த வெடி மருந்தைக் கொண்டு ரிமோட் மூலம் இயக்கக் கூடிய குண்டுகளைத் தயார் செய்வதற்கு நிபுணத்துவம் பெற்ற ஒருவரால்தான் முடியும் என்பதால் போலீஸாருக்கு இது பெரும் சவாலைக் கொடுப்பதாக இருந்தது.
போலீஸாரின் தீவிர விசாரணையில் காந்தி வீதியில் மின்னணுப் பொருட்கள் கடையை நடத்தி வரும் பாலா சிக்கினார். இவர் ஒரு பட்டதாரிப் பொறியாளர். இவரைப் பிடித்து விசாரிக்க போலீஸார் அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால் பாலா இல்லை.
இதையடுத்து அவரது தந்தை காந்தி, தம்பி ரவி, மனைவி சாந்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையால் சாந்தி மிகவும் மனம் உடைந்தார்.
கொலை வழக்கில் கணவர் பெயர் அடிபடுவதை அறிந்த அவர் மனம் உடைந்து நேற்று முழுவதும் வீட்டுக்குள்ளேயே அழுதபடி இருந்துள்ளார். பின்னர் குழந்தைகளை வெளியே அனுப்பிய அவர் வீட்டைப் பூட்டிக் கொண்டு தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தால் சிவகங்கையில் மேலும் பரபரப்பு கூடியது.
![]() |
சாந்தியும், பாலாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
இந் நிலையில் தான் பாலா நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்.
பாலா மீது பல வழக்குகள்..
இதற்கிடையே பாலா மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ரூசோ என்கிற திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாலா 6வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர் அந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
அதேபோல, மதுரையில் ஒரு தனியார் வங்கியிலிருந்து ரூ. 17.5 லட்சம் பணத்தை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்றதாக ஒரு வழக்கும் இவர் மீது உள்ளது.
முருகன் கொலைக்கு காரணம் என்ன?:
பாலாவும் கொலையாளிகளில் இன்னொருவருமான திமுக கவுன்சிலர் மந்தக்காளையும் நெருங்கிய நண்பர்கள்.
திமுகவில் டிக்கெட் கிடைக்காததால், சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற முருகன் தன்னைப் போலவே போட்டி வேட்பாளர்களாகப் போட்டியிட்டு வென்றவர்களின் துணையுடன் நகராட்சித் தலைவர் பதவியைப் பிடித்தார்.
![]() |
இதனால் தலைவர் பதவிக்கான வேட்பாளராக திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட மணிமுத்து என்பவர் ஆத்திரமடைந்தார். இதையடுத்து மந்தக்காளையின் உதவியோடு முருகனைத் தீர்த்துக் கட்ட சதித் திட்டம் தீட்டியுள்ளார் மணிமுத்துர்.
மந்தக்காளைக்கும், முருகனின் நண்பர் நாகராஜனுக்கும் இடையே கேபிள் டிவி நடத்துவது தொடர்பாகவும் பிரச்சினை இருந்தது. இதுதொடர்பாகவும் முருகன்-மந்தக்காளை ஆகிய இருவரும் மோதியு உள்ளனர்.
இப்படி பல ரூபங்களில் தங்களுக்கு முருகன் பிரச்சினை கொடுத்து வந்ததால்தான் அவரைத் தீர்த்துக் கட்ட மணிமுத்துவும், மந்தக்காளையும் முடிவு செய்தனர்.
இதையடுத்து மந்தக்காளை தனது நண்பரான பாலாவை அணுகி முருகனைத் தீர்த்துக் கட்டும் திட்டத்தை விவரித்துள்ளார். அதற்கு உதவ பாலாவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
வெளி மாநிலத்திலிருந்து டிரைநைட்ரோ டெலிகான் வெடிபொருளை வாங்கி வந்துள்ளார். அதை சிவகங்கையில் வைத்து குண்டாக மாற்றி, ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கும் வகையில் வடிவமைத்துள்ளார்.
முருகனின் நடமாட்டத்தை மிகத் தெளிவாக கவனித்து, திட்டமிட்டு, குண்டை காரில் பொருத்தியுள்ளனர். இந்தக் கொலை திட்டத்தில் 10 முதல் 15 பேர் வரை ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் கூறுகின்றனர்.
இந்த கொலைச் சதியில் பல லட்சம் ரூபாயும் புழங்கியுள்ளது. பாலாவுக்கே பெருமளவு பணம் வரை கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவரது வங்கிக் கணக்கில், பெருமளவு பணம் போடப்பட்டு எடுக்கப்பட்டுள்ளதை போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
இவ்வளவு பணத்தை யார் கொடுத்தது, பின்னணியில் உள்ள பெரிய தலை எது என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இப்போது பாலா சரணடைந்துவிட்டதால் முழு உண்மைகயும் வெளி வரும் என்று தெரிகிறது.















Click it and Unblock the Notifications