புலிகளின் தற்கொலைப் படை தினம்;கொழும்பில் உஷார் நிலை
கொழும்பு:விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைப் படை(கரும்புலிகள்) உருவாக்கப்பட்டு இன்றுடன் 20வது ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி 20வது ஆண்டு தினத்தை புலிகள் அனுசரிக்கின்றனர். இதையடுத்து கொழும்பு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
20 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகள் மனித வெடிகுண்டு என்ற புதிய ஆயுதத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய தினம் இது. சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில், யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் உள்ல வடமராச்சி பகுதியில், நெல்லியடி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ராணுவ முகாம் மீது கேப்டன் மில்லர் என்ற விடுதலைப் புலி, குண்டுகள் நிரப்பப்பட்ட லாரியுடன் வந்து மோதி 40 ராணுவ வீரர்களைக் கொன்றார்.
அதுதான் உலகின் முதல் தற்கொலைப் படைத் தாக்குதலாகும். கரும்புலிகள் என தங்களது தற்கொலைப் படைக்கு பெயரிட்டனர் விடுதலைப் புலிகள்.
அன்று முதல் ஜூன் 27ம் தேதி வரை மொத்தம் 322 கரும்புலிகள் தற்கொலைப் படைத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 241 பேர் கடல் தாக்குதல்களிலும், 81 பேர் நிலத் தாக்குதல்களிலும் உயிரிழந்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலிலேயே மிகவும் முக்கியமான சம்பவம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைதான். 1991ம் ஆண்டு நடந்த இந்தத் தாக்குதல் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடையைத் தேடித் தந்தது.
விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலால் இலங்கை அரசு நிலைகுலைந்தாலும் கூட இந்தப் படை காரணமாகவே பல நாடுகளிலும் விடுதலைப் புலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.
கரும்புலிகள் படை உருவாக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆவதையொட்டி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் பகுதிகளில் மறைந்த விடுதலைப் புலி வீரர்களின் படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரார்த்தனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டன.












Click it and Unblock the Notifications