தேனி, குமரி, வேலூர் மருத்துவக் கல்லூரிகள்முன்பு போராட்டம்-ஜெ. அறிவிப்பு
சென்னை: இந்திய மருத்து கவுன்சிலால், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட தேனி, வேலூர், கன்னியாகுமரி அரசு மருத்துவமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
எனது ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வரும் தேனி, கன்னியாகுமரி மற்றும் வேலூர் அரசு மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கு திமுக அரசின் அலட்சியமும், நிர்வாக போக்கும் தான் காரணம். 300 மாணவர் இடங்களை இழந்துள்ளது மாணவர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
இந்த 3 கல்லூரிகளில் போதுமான பேராசிரியர்கள், அலுவலர்கள் இல்லாததை காரணம் காட்டி இந்திய மருத்துவ கவுன்சில் மாணவர் சேர்க்கையை ரத்து செய்துள்ளது.
இதற்குக் காரணமான திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் வரும் 9ம் தேதி காலை 10 மணிக்கு தேனி, கன்னியாகுமரி மற்றும் வேலூர் அரசு மருத்துவ கல்லூரிகள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தேனியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு கழக தேர்தல் பிரிவு செயலாளர் பன்னீர் செல்வமும், கன்னியாகுமரியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஜெயலலிதா பேரவை செயலாளர் தளவாய் சுந்தரமும், வேலூரில் மாணவரணி செயலாளர் உதயகுமாரும் தலைமை தாங்குவார்கள்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி பிரதிநிதிகளும், மக்களும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்.
பொது முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரச்சனையில் பொதுமக்களும் மாணவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications