நாட்டுக்கு துரோகம் செய்தவர் ஷெகாவத்-காங்கிரஸ் முதல் அடி
டெல்லி:நாடே வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தபோது, இங்கிலாந்து காவல்துறையில் சேர்ந்து நாட்டுக்குத் துரோகம் செய்தவர் பைரான் சிங் ஷெகாவத் என்று காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடது சாரிகள் சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பிரதீபா பாட்டீல் குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் குறிப்பாக பாஜக கடுமையாக பிரசாரம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் முதல் முறையாக பாஜக கூட்டணியின் ஆதரவு பெற்ற ஷெகாவத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி கடுமையான குற்றச்சாட்டை கூறியுள்ளது.
இந்தியாவே வெள்ளையர்களை எதிர்த்துத் தீவிரமாக போராடிக் கொண்டிருந்தபோது ஷெகாவத் இங்கிலாந்து போலீஸில் சேர்ந்து நாட்டுக்குத் துரோகம் இழைத்தார் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்க்வி கூறுகையில், 1942ம் ஆண்டு நாடு முழுவதும் வெள்ளையனே வெளியேறு போராட்டம் தீவிரமாக இருந்தது. நாடே திரண்டு வெள்ளையர்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தனர்.
ஆனால் அந்த சமயத்தில் நாட்டுக்காக போராடாமல், நாட்டை ஆக்கிரமித்திருந்த வெள்ளையர் ராணுவத்தில் சேர்ந்தவர் ஷெகாவத். இதன் மூலம் நாட்டுக்குத் துரோகம் இழைத்தவர் ஷெகாவத்.
ஷெகாவத்துக்கு எதிராக நான் எந்தக் குற்றச்சாட்டையும் நான் கூறவில்லை. உண்மையில் இவையெல்லாம் ஏற்கனவே பொதுமக்கள் உலவிக் கொண்டிருப்பவைதான்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்தபோது இங்கிலாந்து போலீஸில் சேர்ந்த ஷெகாவத், நாடு சுதந்திரமடைந்து ஒரு வருடம் கழிந்த பிறகே அதிலிருந்து விலகினார்.
இந்த வகையில், பாஜகதான் குடியரசுத் தலைவர் பதவிக்கான மாண்பைக் குறைத்து விட்டது, களங்கப்படுத்தி விட்டது.
ஷெகாவத் மீது கூறப்படும் புகார்கள்தான் உண்மையில் முக்கிய குற்றச்சாட்டு. பிரதீபா மீதான குற்றச்சாட்டுக்கள் எல்லாம் துணை குற்றச்சாட்டுக்கள்தான். ஷெகாவத் மீது இதுதவிர ஏராளமான புகார்கள் உள்ளன. அவை மக்களுக்குத் தெரியும், பாஜகவுக்கும் தெரியும். அவற்றுக்கு பாஜக முதலில் விளக்கம் சொல்லட்டும் என்றார் சிங்க்வி.












Click it and Unblock the Notifications