ஜெ மீது நடவடிக்கை எடுக்கப்படும்-தேர்தல் ஆணையர்
சென்னை: ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுவதாக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது தவறு. அவர் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திற்கு செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தேர்தலில் 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த விவகாரத்தில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுவதாக முதல்வர் கருணாநிதி கூறுவது தவறு.
இந்த விவகாரத்தில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தான் தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள முடியும். இதற்கான முயற்சிகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது.
மாநில தலைமை தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா, ஜெயலலிதா மனுவை பெற்றுக் கொண்ட தேர்தல் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
அவர்களின் விளக்கத்தை நரேஷ் குப்தா, தேர்தல் ஆணையத்திடம் அளித்த பின் அதனுடைய அடிப்படையில் ஆணையம் உரிய நடவடிக்கையை எடுக்கும் என்றார்.
இதற்கிடையில் புவனகிரி சட்டபேரவை தொகுதி தேர்தல் அதிகாரியாக இருந்த செல்வகுமார், புதுக்கோட்டை தேர்தல் அதிகாரி மோகன் ஆகியோர் தற்போது வருவாய்துறையில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் இருவரும் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். மேலும் இது தொடர்பாக ஆலோசனை பெறுவதற்கு அவர்கள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவை சந்திக்க கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications