கிளாஸ்கோ தாக்குதல்: ஈராக் டாக்டர் மீது குற்றச்சாட்டு பதிவு
லண்டன்:
கிளாஸ்கோ விமான நிலைய தாக்குதல் மற்றும் லண்டன் கார் குண்டுகள் தொடர்பான வழக்கில் முதல் குற்றவாளியாக ஈராக்கைச் சேர்ந்த பிலால் அப்துல்லா சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது குற்றச்சாட்டையும் இங்கிலாந்து போலீஸார் பதிவு செய்துள்ளனர்.
லண்டனில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட இரு கார்கள் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் கிளாஸ்கோ விமான நிலையம் மீது நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல் ஆகிய சம்பவங்கள் தொடர்பாக 3 இந்திய டாக்டர்கள் உள்பட 8 பேரை இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் டாக்டர் முகம்மது ஹனீப் கைது செய்யப்பட்டார். மற்ற 7 பேரும் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பிலால் அப்துல்லா (ஈராக்) மற்றும் இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் கபீல் அகமது ஆகியோர்தான் கிளாஸ்கோ விமான நிலையத்தில் காருடன் போய் மோதியவர்கள்.
இதில் கபீல் அகமது முழுவதும் எரிந்த நிலையில் கவலைக்கிடமான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். பிலால் அப்துல்லா லேசான காயங்களுடன் தப்பினார். அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் டாக்டர் முகம்மது ஹனீப் கைது செய்யப்பட்டுள்ளார். கபீல் அகமதுவின் சகோதரரான சபீல் அகமது உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஹனீப்பை மேலும் நான்கு நாட்களுக்கு விசாரிக்க நீதிமன்றத்தின் அனுமதியை ஆஸ்திரேலிய போலீஸார் பெற்றுள்ளனர். நேற்று மேலும் ஐந்து இந்திய டாக்டர்களிடம் ஆஸ்திரேலிய போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை. இதுதவிர இரண்டு மருத்துவமனைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் பிலால் அப்துல்லாவை இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக இங்கிலாந்து போலீஸார் சேர்த்துள்ளனர். அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரை இன்று லண்டன் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்துகிறார்கள். பிலால் மீது குண்டுவெடிப்புக்கான சதித் திட்டத்தை தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர் தவிர மற்றவர்கள் மீது இன்னும் குற்றச்சாட்டு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
முன்னதாக இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன், ஆஸ்திரேலிய பிரதமர் ஹோவர்டுடன் தொலைபேசியில் பேசி ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் விசாரணை குறித்துக் கேட்டறிந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இப்போது இது, சர்வதேச விசாரணையாக மாறியுள்ளது. இப்போது நடந்த சம்பவத்திற்குக் காரணமானவர்கள் குறித்த அனைத்து விவரங்களும் கிட்டத்தட்ட கிடைத்து விட்டதாக கருதுகிறேன். விரைவில் அனைத்து உண்மைகளும் வெளி வரும் என்றார்.
இதற்கிடையே, இங்கிலாந்துக்குள் அல் கொய்தா அமைப்பினர் ஆழமாக ஊடுறுவி வருவதாக இங்கிலாந்து அரசும், காவல்துறையும் சந்தேகிக்கின்றன. இதுதொடர்பாக உலகின் பல நாடுகளையும் தொடர்பு கொண்டு தகவல் சேகரிக்க ஆரம்பித்துள்ளது லண்டன் போலீஸ்.
அமெரிக்காவுடன் இணைந்து ஈராக் போரில் இங்கிலாந்தும் குதித்தது முதல், அந்நாட்டை தனது முக்கிய எதிரிகள் பட்டியலில் அல் கொய்தா வைத்துள்ளது. மேலும் தற்போது கைதாகியுள்ள பிலால் அப்துல்லா ஈராக்கைச் சேர்ந்தவர் என்பதால், இங்கிலாந்துக்குள் ஆழமாக ஊடுறுவ அல் கொய்தா திட்டமிட்டிருக்கலாம், மேலும் பலர் இங்கிலாந்துக்குள் ஊடுறுவியிருக்கலாம் என இங்கிலாந்து போலீஸ் சந்தேகப்படுகிறது.












Click it and Unblock the Notifications