ஹனீப்புடன் பேச உதவுமாறுபிரதமருக்கு குடும்பம் கோரிக்கை
பெங்களூர்:ஆஸ்திரேலிய போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் முகம்மது ஹனீப்புடன் பேசுவதற்கும், தொடர்பு கொள்வதற்கும் உதவுமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஹனீப்பின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த வாரம் கிளாஸ்கோ விமான நிலையத்தில் நடந்த தாக்குதல் மற்றும் லண்டனில் கார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் முகம்மது ஹனீப் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்து வருகின்றனர். இதனால் ஹனீப் குடும்பம் பெரும் கவலையில் மூழ்கியுள்ளது.
ஹனீப் அப்பாவி, முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக அவரைக் கைது செய்துள்ளனர் என்று ஹனீப்பின் தாயார், தங்கை, தம்பி ஆகியோர் குமுறியுள்ளனர்.
இந்த நிலையில் ஹனீப்புடன் தொடர்பு கொள்வதற்கு பிரதமர் மன்மோகன் சிங் உதவ வேண்டும் என்று ஹனீப்பின் தம்பி முகம்மது சோயப் கோரிக்கை விடுத்துள்ளார். இவர் பெங்களூரில் பி.யூ.சி படித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது அண்ணன் அப்பாவி. அவர் தவறு செய்திருக்க மாட்டார். எந்தவித தீவிரவாத அமைப்புடனும், நபர்களுடனும் அவருக்குத் தொடர்பு இல்லை.
அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்ட செய்தி வந்தது முதல் எங்களது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அவருடன் பேச வேண்டும் என்று விரும்புகிறோம். இதற்கு பிரதமர் மன்மோகன் சிங்தான் உதவ வேண்டும் என்றார் சோயப்.












Click it and Unblock the Notifications