தமிழர் பகுதிகளில் மீண்டும் விமான தாக்குதல்
கொழும்பு:
தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இலங்கை படையினர், மீண்டும் விமானம் மூலம் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். இதனால் தமிழர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயரத் தொடங்கியுள்ளனர்.
இலங்கையில் விடுதலைப் புலிகளாக தாக்குதல் நடத்தி வரும் இலங்கைப் படைகள், தொடர்ந்து விமானப்படை மூலமும் தாக்குதல் நடத்தி வந்தது. இதனால் பல அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். வீடுகளை இழந்து பாதுகாப்பான இடங்களுக்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு விடுதலைப் புலிகள் வான்வழியாக தாக்குதல் நடத்தி, இலங்கை அரசுக்கு அதிர்ச்சி அளித்தனர். இந்த விமானத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை படையின் விமான தாக்குதல் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது.
சமீப காலமாக விமானப் படை தாக்குதல் ஏதும் நடைபெறவில்லை. இந்த நிலையில் நேற்று மீண்டும் வான்வழித் தாக்குதலை இலங்கை படைகள் தொடங்கியுள்ளன.
மன்னார், மட்டக்களப்பு மாவட்டங்களில் ராணுவத்தின் துணையுடன் விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புலிகளின் முகாம்களைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அப்பகுதிகளில் அப்பாவித் தமிழர்கள் அதிக அளவில் இருப்பதாக புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மொத்தம் மூன்று முறை விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள தொப்பிகலா பகுதியைப் பிடிக்க ராணுவம் கடுமையாக முயன்று வருகிறது. ஆனால் இங்கு விடுதலைப் புலிகள் மிகக் கடுமையாக போரிட்டு வருவதால், புலிகள் வசம் உள்ள இப்பகுதியைப் பிடிக்க முடியாமல், ராணுவம் திணறி வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தற்கொலைப் படை தினத்தை விடுதலைப் புலிகள் அனுஷ்டித்தனர். கடந்த 1987ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள ராணுவ முகாம் மீது கேப்டன் மில்லர் என்கிற விடுதலைப் புலி, வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தில் சென்று மோதியதுதான், புலிகளின் முதல் தற்கொலைப் படைத் தாக்குதல்.
நெல்லியடி தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்ததன் 20வது ஆண்டு தினம் புலிகள் வசம் உள்ள தமிழர் பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், இதுதொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மறைந்த புலிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பான புகைப்படங்களை விடுதலைப் புலிகள் அமைப்பு வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications