கூட்டுறவு சங்க தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு
சென்னை:தமிழகத்தில் முதல் கட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்து முடிந்தது.
தமிழகத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைபெற்றது. ஐந்து கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்ட கூட்டுறவு சங்கத் தேர்தலின் முதல் கட்ட தேர்தல் இன்று நடந்தது.
முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் பல இடங்களில் பெரும் ரகளையில் முடிந்தது. ஆளுங்கட்சியான திமுகவினர் பிற கட்சியினரை வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் அடித்து விரட்டியதாக அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டவை புகார் கூறின.
அதிமுக இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை, புறக்கணித்துள்ளது. பெரும்பாலான இடங்களில் திமுகவினரே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியினருக்கு சில இடங்களில் மனு தாக்கல் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
இந் நிலையில் இன்று முதல் கட்டத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 5,939 கூட்டுறவு சங்கங்களுக்கு இன்று தேர்தல் நடந்தது. பல சங்கங்களில் உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த சங்கங்களின் தலைவர் பதவிக்கு 27ம் தேதி தேர்தல் நடைபெறும்.
தமிழகத்தில் மொத்தம் 14 துறைகளில் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில் பதிவாளர் கட்டுப்பாட்டில் 1,945 கூட்டுறவு வேளாண்மை சங்கங்களும், செயற் பதிவாளர் கட்டுப்பாட்டில் 3,994 சங்கங்களும் உள்ளன.
இன்று நடந்த முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு இடைவிடாமல் நடந்தது.
பெரும்பாலான கூட்டுறவு சங்கங்களில் இயக்குநர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டு விட்டதால் மிச்சமுள்ள சங்கங்களுக்கு மட்டும் இன்று தேர்தல் நடந்தது.
சென்னையில் 141 கூட்டுறவு சங்கங்களுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடந்தது. அதில் 105 சங்கங்களுக்கு போட்டியின்றி தேர்வாகி விட்டதால் மிச்சமுள்ள சங்கங்களுக்கு மட்டும் தேர்தல் நடந்தது.
வேட்பு மனு தாக்கலின்போதே பெரும் தகராறு ஏற்பட்டதால், இன்றைய வாக்குப்பதிவின்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கூட்டுறவு சங்க முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்தது.
திமுகவினரின் கோஷ்டி மோதல்-தேர்தல் ரத்து:
காஞ்சிபுரம் அருகே முத்தையால்பேட்டையில் ஒரு கும்பல் வாக்கு பெட்டிகளை உடைத்தும், வாக்கு சீட்டுகளை கிழித்தும் வன்முறையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து தேர்தல் அதிகாரி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம், இந்த தேர்தலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினார்.
திமுக கட்சியின் ஐயம்பேட்டை செயலாளரும், அவருடைய ஆதரவாளர்களும் இதற்கு காரணம் என தெரிகிறது.
இதே போல் கோவையிலும் கிணத்துகடவு பகுதியில் கூட்டுறவு சங்கத்தேர்தலில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
கோவையில் கிணத்துகடவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தேர்தலில் திமுகவினரின் கோஷ்டி மோதலில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த வன்முறை எதிர்த்து பொதுமக்கள் கடையடைப்பு நடத்தினர். இதனால் சொக்கனூர், வடசித்தூர் பகுதிகளில் தேர்தல் நடைபெறவில்லை.












Click it and Unblock the Notifications