பிரதீபா பாட்டீல் ரூ. 36 லட்சம் முறைகேடு:சபாநாயகரிடம் பாஜக கூட்டணி திடுக் புகார்
டெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிரதீபா பாட்டீல் ரூ. 36 லட்சம் நிதியை, முறைகேடாக தனது கணவரின் அறக்கட்டளைக்கு ஒதுக்கி மோசடி செய்துள்ளதாக கூறி மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியிடம் தேசிய ஜனநாயகக் கூட்டணி புகார் கொடுத்துள்ளது.
பிரதீபா பாட்டீல் மீது சரமாரியாக புகார்களை அடுக்கி வருகின்றன பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும். அத்தனையும் பொய்யானவை என்று கூறி வருகிறார் பிரதீபா பாட்டீல்.
இந்த நிலையில் இன்று புதிய புகார் ஒன்றை எழுப்பியுள்ளது தேசிய ஜனநாயகக் கூட்டணி. இந்தப் புகாருடன் இன்று காலை மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாஜக தலைவர் வி.கே.மல்ஹோத்ரா உள்ளிட்டோர் அடங்கிய குழு சந்தித்தது.
அந்தப் புகாரில், பிரதீபா பாட்டீல் கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை மக்களவை உறுப்பினராக இருந்தார். 1995ம் ஆண்டு பிரதீபாவின் கணவருக்குச் சொந்தமான அறக்கட்டளை சார்பில் விளையாட்டு வளாகம் கட்ட எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 36 லட்சம் நிதியை ஒதுக்கினார் பிரதீபா பாட்டீல்.
அவர் நிதி ஒதுக்கியபோது பிரதீபா பாட்டீல் கணவரின் அறக்கட்டளைக்குச் சொந்தமாக நிலம் இல்லை. கடந்த ஏப்ரல் மாதம் தான் 25 ஆயிரம் சதுர அடி நிலத்தை மாநில அரசு ஒதுக்கியது. கிட்டத்தட்ட 12 ஆண்டு இடைவளிக்கு முன்பு பிரதீபா பாட்டீல் ஒதுக்கிய ரூ. 36 லட்சம் நிதியை இப்போது விளையாட்டு வளாகம் கட்டுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை உறவினர்களுக்கு ஒதுக்கக் கூடாது என்பது விதியாகும். எனவே பிரதீபா பாட்டீல் தனது கணவரின் அறக்கட்டளைக்கு நிதி ஒதுக்கீடு செய்தது மிகப் பெரிய குற்றம். மேலும், 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட பணத்தை இப்போது பயன்படுத்த எப்படி அனுமதிக்கப்பட்டது என்று தெரியவில்லை.
இதுகுறித்து விசாரணை நடத்தி பிரதீபா பாட்டீல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் நிற்கும் ஒருவர் இப்படியெல்லாம் மோசடி செய்திருப்பது மிகவும் கேவலமாக இருப்பதாக வி.கே.மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications