நகராட்சித் தலைவர் படுகொலை:சரணடைந்த 2 பேருக்கு போலீஸ் காவல்
சிவகங்கை:சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன் கார் குண்டு மூலம் கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்த திமுக கவுன்சிலர் மந்தக்காளை மற்றும் என்ஜீனியர் பாலா ஆகியோரை ஒரு வாரம் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சிவகங்கை நீதிமன்றம் அனுமதி அளித்தது.
சிவகங்கை திமுக நகராட்சித் தலைவர் முருகன் இரு வாரங்களுக்கு முன்பு கார் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளிகளான திமுக கவுன்சிலர் மந்தக்காளையும், பொறியாளர் பாலாவும் குளித்தலை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இதையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களது நீதிமன்றக் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து இருவரும் சிவகங்கை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது இருவரையும் 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கோரி காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவைப் பரிசீலித்த மாஜிஸ்திரேட் அனுராதா, இருவரையும் ஒரு வாரம் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து இருவரும் பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டார்.
முன்னதாக இருவர் சார்பிலும் ஆஜராக வந்த வக்கீல்களுக்கும், சிவகங்கை நீதிமன்ற வக்கீல்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் நிலையும் உருவானது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டதால் நிலைமை சரியானது.












Click it and Unblock the Notifications