தமிழகம் தப்பி வந்த அமெரிக்க கைதி நாடு கடத்தல்
காஞ்சிபுரம்:அமெரிக்காவிலிருந்து தப்பி தமிழகத்திற்கு ஓடி வந்த கைதியை, போலீஸார் மீண்டும் அமெரிக்காவுக்கே திருப்பி அனுப்பி வைத்தனர்.
அமெரிக்காவின் ப்ரூக்ளின் நகரைச் சேர்ந்தவர் ஆலன் அரோவிட்ஸ் (52). இவர் குழந்தைகள் மன நல ஆலோசகராக அங்கு பணியாற்றி வந்தார். கடந்த 1982ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரை தன்னிடம் சிகிச்சைக்காக வந்த சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஆலன் ஈடுபட்டதாக புகார்கள் வந்தன.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகார்களின் அடிப்படையில் ஆலன் கைது செய்யப்பட்டார். அவருக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆலன், 2004ம் ஆண்டு பரோலில் விடுதலையானார். விடுதலையான பின்னர் அமெரிக்காவிலிருந்து தப்பினார்.
இதையடுத்து ஆலனைக் கைது செய்யுமாறு இன்டர்போல் மூலம் பல்வேறு நாடுகளுக்கும் அமெரிக்க காவல்துறை உஷார்படுத்தியது. இந்த நிலையில் ஆலன் தமிழகத்தில் பதுங்கியிருப்பதாக தமிழக டிஜிபிக்கு இன்டர்போல் தகவல் அனுப்பியது.
இதைத் தொடர்ந்து மகாபலிபுரம் அருகே தலைமறைவாக வசித்து வந்த ஆலனை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஏராளமான பாஸ்போர்ட்டுகள், ஆவணங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், ஆலனை அமெரிக்காவுக்கு நாடு கடத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக போலீஸார் ஆலனை, டெல்லி வழியாக அமெரிக்கா செல்லும் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications