சந்திரசேகர் உடல் இன்று தகனம்:7 நாள் அரசு துக்கம் அறிவிப்பு
சென்னை:மறைந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் உடல் இன்று டெல்லியில் தகனம் செய்யப்படுகிறது. அவரது மறைவையொட்டி நாடு முழுவதும் 7 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறு. தமிழகத்திலும் ஒரு வார காலத்திற்கு துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.
புற்று நோய் காரணமாக டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர் நேற்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
![]() |
அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள், மாநில முதல்வர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இன்று சந்திரசேகரின் உடல் தகனம் நடைபெறுகிறது. ஏக்தா ஸ்தல் (ஒற்றுமை ஸ்தலம்) என்ற இடத்தில் உடல் தகன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு தெற்கு அவென்யூவில் உள்ள வீட்டிலிருந்து சந்திரசேகரின் இறுதி யாத்திரை கிளம்புகிறது. மாலை 5 மணிக்கு முழு அரசு மரியாதைகளுடன் உடல் தகனம் நடைபெறும்.
![]() |
முன்னாள் குடியரசுத் தலைவர்கள் சங்கர் தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன் ஆகியோரது உடல் தகனம் நடந்த இடத்திற்கு அருகே சந்திரசேகரின் உடல் தகனம் நடைபெறவுள்ளது.
சந்திரேசகர் மறைவையொட்டி மத்திய அரசு 7 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில், மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்களில் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும்.
இறுதிச் சடங்கு நிகழ்ச்சியையொட்டி இன்று பிற்பகல் 1.30 மணியுடன் மத்திய அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதில், சந்திரசேகர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்திலும் 7 நாள் துக்கம்:
தமிழகத்திலும் சந்திரசேகர் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி 7 நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்திரசேகர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.














Click it and Unblock the Notifications