காவிரிக்காக உண்ணாவிரதம் இருக்கக்கூடாதா?-கருணாநிதிக்கு விஜயகாந்த் கேள்வி
திருவள்ளூர்:கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடப்படாததற்காக கர்நாடகத்தைக் கண்டித்து முதல்வர் கருணாநிதி ஏன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுள்ளார்.
திருவள்ளூரில் நேற்று இரவு நடந்த பொதுக் கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலித்து வந்தபோது தேர்தலை ஒத்திவைத்தால் உண்ணாவிரதம் இருப்பேன் என்று தேர்தல் ஆணையத்தை மிரட்டினார் முதல்வர் கருணாநிதி.
ஆனால் இப்போது காவிரிப் பிரச்சினையில் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ள நிலையில் ஏன் கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கவில்லை?
குடியரசுத் தலைவர் வேட்பாளரை முடிவு செய்யும் அளவுக்கு செல்வாக்குப் படைத்த ஒரு முதல்வரால், பிரதமர் மன்மோகன் சிங், கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் பேசி காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாதா?
நான் மீண்டும் தமிழக கட்சிகளுக்குக் சவால் விடுக்கிறேன். எதிர்வரும் தேர்தல்களில் யாரும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிடத் தயாரா?
திமுக அரசில், கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடுகள் கேலிக் கூத்தாக உள்ளன. சில கட்சிகள் தங்களது சுய லாபத்திற்காக அரசைக் குறை கூறி விமர்சித்து வருகின்றன. சில கட்சிகள் தங்களது பொறுப்புகளை மறந்து ஜால்ரா அடித்துக் காலம் தள்ளி வருகின்றன.
தமிழகத்தில் தீவிரவாதம் அதிகரித்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. இதற்கு திமுக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும். வேலைவாய்ப்பின்மை விஸ்வரூபம் எடுத்துள்ளதால் இளைஞர்கள் தீவிரவாதத்தைக் கையில் எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குடும்பத்தில் ஒருவருக்கு வேலை என்ற திட்டத்தை அரசு அமல்படுத்தினால் இந்த அவல நிலையை ஒழிக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு ஒட்டுக்காக இலவச கலர் டிவிக்கள் தரும் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது திமுக அரசு என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications