ஜனாதிபதி தேர்தல்- எம்எல்ஏக்கள் வேறு மாநிலத்திலும் வாக்களிக்கலாம்-தேர்தல் ஆணையம்
டெல்லி:எம்எல்ஏக்கள் தங்கள் சொந்த மாநிலத்தை விட்டு வேறு எந்த மாநிலத்திலிருந்தும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கலாம். அதற்கு 96 மணி நேரத்திற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் எம்பிக்கள் நாடாளுமன்றத்திலுள்ள வாக்குச் சாவடியிலும், எம்எல்ஏக்கள் மாநில தலைநகரங்களிலும் வாக்களிப்பது வழக்கம்.
இதில் எம்பிக்கள் டெல்லியில் வாக்களிக்க முடியவில்லை எனில் மாநில தலைநகரங்களிலும், சொந்த மாநிலங்களில் வாக்களிக்க முடியாத எம்எல்ஏக்கள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று டெல்லி நாடாளுமன்றத்திலும் வாக்களிக்கலாம் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு சென்று வாக்களிக்க எம்எல்ஏக்களுக்கு அனுமதி கிடையாது. ஏனெனில் வாக்கு சீட்டு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். ஆனால் தற்போது இதற்கு தேர்தல் ஆணையம் விதிவிலக்கு அளித்துள்ளது.
ஒரு எம்எல்ஏ தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வேறு மாநிலத்தில் சென்று வாக்களிக்கலாம். இதற்கு 96 மணி நேரத்திற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வாக்கு சீட்டுகளை அனுப்புவதற்கு கால அவகாசம் தேவை என்பதால் 4 நாட்கள் முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி, வரும் 19ம் தேதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் எம்எல்ஏக்கள் வாக்களிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் விளக்கங்களை கேட்டிருந்தார்.
இதனையடுத்து தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பினை நேற்று வெளியிட்டது.












Click it and Unblock the Notifications