சுயாட்சியுடன் கூடிய தமிழ் கவுன்சில்:இலங்கை அமைச்சர் புது யோசனை
கொழும்பு:சுயாட்சியுடன் கூடிய தமிழ் கவுன்சிலை நிறுவுவதன் மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று இலங்கை அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அமைச்சர் மகிந்தா விஜேசேகரா யோசனை தெரிவித்துள்ளார்.
இலங்கை சிறப்புத் திட்டங்களுக்கான அமைச்சராக விஜேசேகரா நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று மாத்தரை நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விடுதலைப் புலிகளுடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பதால், இனப் பிரச்சினை தீர்ந்து விடாது.ராணுவ ரீதியில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.
அதிக அளவிலான அதிகாரங்களுடன் கூடிய, சுயாட்சியுடன் கூடிய தமிழ் கவுன்சிலை உருவாக்கி இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணலாம்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை புலிகளிடம் மொத்தமாக கொடுத்து விட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் புதிதாக அமையும் தமிழ் கவுன்சிலில் புலிகளுக்கும் இடம் கொடுக்கலாம்.
நாம் புதிதாக சிந்திக்க வேண்டும். பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய யோசனைகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.
விலைவாசியும், செலவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால், போர்ச் செலவுகளும் கடுமையாக உயர்ந்துள்ளது. பாதுகாப்புப் படையினர் போடும் ஒவ்வொரு குண்டுக்கும் குறைந்தது ரூ. 65 ஆயிரம் செலவாகிறது.
ஆயுதங்கள், குண்டுகள் வாங்க அதிக கடன் வாங்கப்படுகிறது. இந்தக் கடன் தொகைக்கான வட்டித் தொகை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இது நமது நாட்டின் பொருளாதாரத்தை ஆட வைக்கும அளவுக்கு அதிகரித்து வருகிறது.
எனவே இனப் பிரச்சினைக்கு உடனடியாக, இறுதியான தீர்வு காண வேண்டியது நமது நாட்டுக்கு நல்லது என்றார் விஜேசேகரா.












Click it and Unblock the Notifications