லண்டனை தாக்கும் சதித் திட்டம் பெங்களூரில் தீட்டப்பட்டதா?
லண்டன்:லண்டனில் தீவிரவாத தாக்குதலுக்கான சதித் திட்டம் பெங்களூரில் தான் தீட்டப்பட்டிருக்க வேண்டும் என உளவுப் பிரிவுகள் கருதுகின்றன.
கடந்த 29-ம் தேதி லண்டனில் அனாதையாக நின்றிருந்த கார்களில் இருந்து சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை போலீஸார் கைப்பற்றி செயலிழக்க செய்தனர். இதையடுத்து கிளாஸ்கோ விமான நிலையத்திற்குள் ஜீப்பை எரியும் நிலையில் ஓட்டு வந்து மோதி தற்கொலைத் தாக்குதல் நடந்தது.
ஆனால், இதனால் அதிக சேதம் ஏற்படவில்லை. ஜீப்பை ஓட்டி வந்த ஒருவர் காயமின்றி தப்பிவிட்டார். ஆனால், அதில் இருந்த பெங்களூரைச் சேர்ந்த கபீல் அகமது என்பவர் 90 சதவீத தீக் காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகிறார்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இன்டர்நெட் சாட்டிங் அறைகளில் நடந்த உரையாடல்களை வைத்து ஆஸ்திரேலியாவில் ஹனீப் என்ற பெங்களூர் டாக்டரும், லண்டனில் சகீல் அகமத் என்ற டாக்டரும் கைது செய்யப்பட்டனர்.
சகீல் அகமதுவும் கபீல் அகமதுவும் சகோதரர்கள் ஆவர். அதே போல ஹனீப்பும் இவர்களது உறவினர் என்றும் தெரியவந்துள்ளது.
இவர்கள் மூவருமே பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த தாக்குதலுக்கான சதித் திட்டமே பெங்களூரில் தான் தீட்டப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கபீல் அகமதுவுக்கும் ஈராக்கை சேர்ந்த பிலால் என்பவருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிந்துள்ளது. இந்த பிலாலுக்கு அல்-கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதும் உறுதியாகியுள்ளது.
லண்டன் போலீஸார் கபீல் அகமது தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தி சில சிடிக்களை கைப்பற்றியுள்ளனர். அதில் இவரது நெட்வோர்க் குறித்து பல தகவல்கள் கிடைத்துள்ளன.
ஹனீப் வீட்டில் ஆஸி. போலீஸ் சோதனை
இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் முகம்மது ஹனீப்பின் வீட்டை ஆஸ்திரேலிய போலீஸார் சோதனையிட்டனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள கோல்ட் கோஸ்ட் மருத்துவமனையில் ஹனீப் வேலை பார்த்து வருகிறார். அவருடன் வேலை பார்த்து வரும் இன்னொரு இந்திய டாக்டர் முகம்மது ஆசிப் அலி.
இங்கிலாந்து தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக இவர்கள் இருவரையும் ஆஸ்திரேலிய போலீஸார் பிடித்தனர். அவர்களில் ஆசிப் அலியை விசாரணைக்குப் பின்னர் விடுவித்தனர். ஆனால் ஹனீப் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் தங்கியிருந்த வீட்டில் ஆஸ்திரேலிய போலீஸார் சோதனை நடத்தினர்.
ஹனீப்புக்கு மேலும் 2 நாள் காவல்:
இந் நிலையில் டாக்டர் முகம்மது ஹனீப்பின் போலீஸ் காவல் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹனீப்பின் போலீஸ் காவலை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்க ஒப்புக் கொண்ட நீதிபதி புதன்கிழமை மாலை 6 மணி வரை ஹனீப்பை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
இதையடுத்து ஹனீப்பிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட முக்கிய ஆவணங்களை வைத்து அவரிடம் விசாரிக்க ஆஸ்திரேலிய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, டாக்டர் ஹனீப் பெங்களூரில் உள்ள தனது மனைவியுடன் தொலைபேசியில் பேச ஆஸ்திரேலிய போலீஸார் இன்று அனுமதி அளித்தனர். இதையடுத்து ஹனீப் தனது மனைவியுடன் பேசினார்.
இந் நிலையில் ஹனீப் மீது என்ன குற்றச்சாட்டு உள்ளது, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற விவரங்களை போலீஸார் தர மறுப்பதாக ஹனீப்பின் வழக்கறிஞர் பீட்டர் ருஸ்ஸோ குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications