முல்லை பெரியாறு, இடுக்கியில் நக்சல்கள்?
தேனி:பெரியகுளம் காட்டுப் பகுதியில் இருந்து தப்பிய நக்சல்கள் இடுக்கி, மூணாறு மற்றும் முல்லை பெரியாறு (குமுளி-தேக்கடி) வனப் பகுதிகளில் பதுங்கியிருக்கலாம் என அதிரடிப்படை கூடுதல் டிஜிபி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
பெரியகுளம் முருகமலை வனப்பகுதிகளில் ஆயுதப்பயிற்சி எடுத்த 3 நக்சல்களை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். மேலும் பலர் தப்பியோடிவிட்டனர்.
இவர்களை பிடிக்க அதிரடிப்படை கூடுதல் டிஜிபி விஜயகுமாரை தமிழக அரசு நியமித்துள்ளது.
அவரது தலைமையில் கடந்த 4 நாட்களாக போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தப்பிய நக்சலைட்டுகள் பெரியகுளம் வனப் பகுதியை தவிர, ஒகேனக்கல் மற்றும் வருசநாடு வனப் பகுதியிலும் பதுங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இந் நிலையில் விஜய்குமார் நிருபர்களிடம் பேசுகையில்,
அதிரடிப் படை தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. அதிக நக்சல்கள் நடமாட்டம் உள்ளதாக கருதப்படும் நாமக்கல், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக-கேரள எல்லையும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள கேரள எல்லைப் பகுதியான இடுக்கி, மூணாறு போன்ற பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தேவைப்பட்டால் கேரள போலீஸாரின் உதவியைக் கேட்போம்.
தர்மபுரி மற்றும் ஆந்திர எல்லையிலும் 550 போலீஸார் கேமரா, அதிநவீன துப்பாக்கிகளுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தலா 12 போலீஸார் கொண்ட 40 குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளோம்.
வன கிராமப் பகுதிகளிலும் தேடுதல் வேட்டை நடக்கிறது. ஏனென்றால் நக்சல்கள் படித்த இளைஞர்கள் போல் வேடமிட்டு கிராமத்தில் உள்ள குறிப்பாக படித்த இளைஞர்களை பிரெயின் வாஷ் செய்து வருகின்றனர்.
நக்சல் தீவிரவாதிகளை பிடிக்க மலைவாழ் மக்களும், கிராம இளைஞர்களும் போலீஸ் மற்றும் அதிரடிப் படையினருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications