காவிரி பாதுகாப்பு குழு அமைக்கராமதாஸ் யோசனை
சென்னை:
காவிரிப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண அனைத்துக் கட்சியினரும் அடங்கிய காவிரி உரிமை பாதுகாப்பு குழுவை அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரிப் பிரச்சினையில் தமிழக விவசாயிகளுக்கு நீதி கிடைக்க உடனடியாக காவிரி உரிமை பாதுகாப்பு குழுவை அமைக்க வேண்டும்.
இந்தக் குழுவில் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், சட்ட நிபுணர்கள் உறுப்பினர்களாக இடம் பெற வேண்டும்.
இப்படி ஒரே குடையின் கீழ் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், இப்பிரச்சினையில் நிச்சயம் நமது பக்கத்து நீதியை நிலைநாட்ட முடியும்.
கர்நாடக அரசுடன் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை என்பது நாம் அனுபவப் பூர்வமாக கண்ட ஒன்று. எனவே கர்நாடக அரசுடன் இனி பேச்சே நடத்தக் கூடாது.
கடந்த 30 வருடங்களில் இதுதொடர்பாக இரு தரப்பிலிரும் 35 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் ஒருமுறை கூட உடன்பாடு ஏற்பட்டதில்லை.
இதுதவிர சமீபத்தில் காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த இறுதித் தீர்ப்பையும் கூட கர்நாடக அரசு நிராகரித்து விட்டது. இந்த நிலையில் கர்நாடகத்துடன் நாம் பேச்சே நடத்தக் கூடாது. அதில் எந்த அர்த்தமும் இல்லை.
அனைத்து அரசியல் கட்சிகளும் கரம் கோர்த்து, இந்தப் பிரச்சினையில் இணைந்து செயல்பட்டு, நமது விவசாயிகளுக்கு நீதியை நிலைநாட்ட உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications