இட ஒதுக்கீடு: கருணாநிதிக்கு எதிரான வழக்கு-உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
டெல்லிபிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிராக கருத்து தெரிவித்த முதல்வர் கருணாநிதியை முதல்வர் பதவியிலிருந்து நீக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதுதொடர்பாக கே.ஆர்.ராமசாமி என்கிற டிராபிக் ராமசாமி தாக்கல் செய்திருந்த மனுவில்,
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கடுமையாக விமர்சித்து முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் மீது சாதாரண மக்களுக்கு உள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் விதமாக கருணாநிதியின் பேச்சு உள்ளது.
இரண்டு அல்லது மூன்று பேர் (நீதிபதிகள்) சேர்ந்து 100 கோடி மக்களின் தலைவிதியை நிர்ணயிப்பது ஜனநாயகத்திற்கு பெரும் கேடு என்றும் கருணாநிதி கருத்து தெரிவித்திருந்தார்.
இப்படிக் கூறுவதற்கு கருணாநிதிக்கு யாரும் அதிகாரம் கொடுக்கவில்லை. முதல்வர் பொறுப்பில் உள்ள அவர் இதன் மூலம் பதவியேற்றபோது எடுத்துக் கொண்ட உறுதிமொழியை மீறி விட்டார்.
எனவே முதல்வர் பதவியை அவரிடமிருந்து பறிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ரவீந்திரன் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தின் தீர்ப்பை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அதற்காக யாரையும் தண்டிக்க முடியாது என்று கூறி ராமசாமியின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications