நகராட்சித் தலைவர் கொலை: சிவகங்கை தெப்பக்குளத்தில் குண்டுகள்!!!
சிவகங்கை: சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகனைக் கொலை செய்வதற்காக வாங்கப்பட்ட வெடிகுண்டுகள் அடங்கிய பெட்டிகள் அங்குள்ள தெப்பக்குளத்திலிருந்து மீட்கப்பட்டன.
சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த திமுக கவுன்சிலர் மந்தக்காளை, என்ஜீனியர் பாலா ஆகிய இருவரும் தற்போது போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது கேபிள் டிவி தொழில் போட்டி காரணமாக கொன்றதாக இருவரும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தனர்.
மேலும் எப்படி கார் வெடிகுண்டைத் தயாரித்தோம், எப்படி வெடிக்க வைத்தோம் என்பதையும் இருவரும் விவரித்துள்ளனர். தென் மண்டல ஐஜி சஞ்சீவ் குமார் நேரடியாக இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று நடந்த விசாரணையின்போது கார் குண்டு தயாரிப்பதற்காக வாங்கி வந்த 3 வெடிகுண்டுப் பெட்டிகளில் இரண்டை, தெப்பக்குளத்தில் போட்டுள்ளதாக மந்தக்காளை தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் தெப்பக்குளத்தில் வீசப்பட்ட இரு பெட்டிகளையும் கைப்பற்றினர்.
வெடிகுண்டு நிபுணர்களும், தீயணைப்புப் படையினரும் இணைந்து இந்த வெடிகுண்டுப் பெட்டிகளை மீட்டனர்.
இந்தப் பெட்டியில் வெடிபொருட்களை நிரப்பி, மின்சார இணைப்பு கொடுத்து, பின்பு பேட்டரியில் இணைப்பு ஏற்படுத்தி ரிமோட் மூலம் இயக்கி வெடிக்க வைத்துள்ளார் பாலா.
இதுதவிர மந்தக்காளை வீட்டுக் கிணற்றிலிருந்து ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர், மின்னணு உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கொலைத் திட்டத்திற்குத் தேவையான வெடிபொருட்களை ராமேஸ்வரத்திலிருந்து இவர்கள் வாங்கியுள்ளனர். பின்னர் வாஸ்தாபட்டி காட்டுக்குள் டம்மி வெடிகுண்டை வெடித்து சோதனை நடத்தியுள்ளனர். அதில் திருப்தி வராததால், இன்னொரு இடத்திற்குப் போய் டெஸ்ட் செய்துள்ளனர்.
தொடர்ந்து மந்தக்காளை மற்றும் பாலாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications