டெல்லி வறளும், மும்பை, சென்னை மிதக்கும்
டெல்லி:மும்பை, சென்னை போன்ற உலகின் கடலோரப் பகுதிகளில் உள்ள நகரங்கள் வெள்ளப் பெருக்கால் பெரும் சேதங்களை சந்திக்க நேரிடும் என ஐ.நா. சபையின் ஐ.நா. மக்கள் நிதியம் எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதையும் இப்போது அச்சுறுத்தி வரும் வார்த்தை குளோபல் வார்மிங். உலகம் முழுவதும் வானிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என விஞ்ஞானிள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் அமைப்பு ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. குளோபல் வார்மிங் காரணமாக கடலோரங்களில் உள்ள நகரங்களில் கடல் கொந்தளிப்பு ,கடல் சீற்றம், புயல், வெள்ளம் ஆகியவற்றால் பெரும் பாதிப்பு ஏற்படும், நகரங்கள் வெள்ள நீரில் மிதக்கும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
அதிலும் மும்பை, சென்னை போன்ற கடல் மற்றும் நதித் துவாரங்களில் அமைந்துள்ள நகரங்களில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பு மிக மிக அதிகம் இருக்கும் என்றும் மக்கள் தொகை நிதியம் எச்சரித்துள்ளது.
கடலோர நகரங்களில், கடல் கொந்தளிப்பு, கடல் மட்டம் உயர்வு போன்றவற்றின் காரணமாக நன்னீர், உப்பு நீராக மாறி விடும் அபாயங்களும் உள்ளன. இதனால் இந்த நகரங்களில் குடிநீருக்குப் பெரும் பிரச்சினை ஏற்படும்.
இதுபோன்ற ஆபத்துக்களை சமாளிக்க கடலோர மண்டல நிர்வாகத்திற்கென தனி கவனம் கொடுத்து, சிறப்பான திட்டங்களை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் பெரும் அழிவுகளையும், ஆபத்துக்களையும் சமாளிக்க முடியும்.
கடலோர நகரங்களில் இதுபோல நீரால் ஆபத்து ஏற்படும் என்றால், டெல்லி போன்ற நகரங்களில் தண்ணீர் இல்லாமல் பெரும் வறட்சி ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் அதிகம் உள்ளதாகவும் அந்த நிதியம் எச்சரித்துள்ளது.
இந்த நகரங்களில் குடிநீரே இல்லாத நிலை கூட ஏற்படலாம் எனவும் ஐ.நா. மக்கள் தொகை நிதியம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications