4 தொகுதிகளில் போட்டி: ஜெ. மீதுகடலூர், பரங்கிப்பேட்டையில் வழக்குப் பதிவு
சென்னை:2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டை நீதிமன்றங்களில் நேற்று மாலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா, ஆண்டிப்பட்டி, புவனகிரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை ஆகிய நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக திமுக எம்.பி. செ.குப்புசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜெயலலிதா மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கையில் இறங்கியது. புவனகிரி, புதுக்கோட்டை தொகுதி தேர்தல் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கையில் இறங்கினர்.
நேற்று முதலில் புவனகிரி தொகுதி தேர்தல் அதிகாரி செல்வமணி, சிதம்பரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் புவனகிரி தொகுதிக்குட்பட்ட கோர்ட்டில்தான் மனு தாக்கல் செய்ய முடியும் என்று கூறிய நீதிபதி வசந்தி அந்த மனுவை இங்கு விசாரணைக்கு ஏற்க முடியாது என்று கூறினார்.
ஆனால் அதை ஏற்காமல் செல்வமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இங்குதான் தாக்கல் செய்வோம் என்று வாதாடினார். ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி வசந்தி, இந்த மனுவை பரங்கிப்பேட்டை நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிடுகிறேன் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து செல்வமணியும், அவரது வழக்கறிஞரும் பரங்கிப்பேட்டை நீதிமன்றத்திற்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் போனபோது கோர்ட் நேரம் முடிந்து விட்டது.
இதனால் இன்று மனு தாக்கல் செய்ய முடியாது என்று நீதிபதி பிருந்தா தேவி கூறி மனுவைப் பெற மறுத்தார். இதையடுத்து செல்வமணியும், வக்கீலும் சென்றனர்.
ஆனால் இரவில் மனுவை ஏற்கலாம் என நீதிபதி பிருந்தாதேவிக்கு உத்தரவு வந்ததால் அவர் மனுவை ஏற்றார். விசாரணையை ஆகஸ்ட் 9ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
இதேபோல புதுக்கோட்டை நீதிமன்றத்திலும் ஜெயலலிதா மீது வழக்கு தொடரப்பட்டது. புதுக்கோட்டை தொகுதி தேர்தல் அதிகாரியான, ஆர்.டி.ஓ மோகன் புதுக்கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தார்.
மனுவைப் பரிசீலித்த நீதிபதி பத்மநாபன் ஆகஸ்ட் 13ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். மேலும், காலதாமதமாக வழக்கு தொடர்ந்திருப்பதால் இதுகுறித்து ஆட்சேபனை உண்டா என்பது குறித்து பதில் அளிக்குமாறு கூறி ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications