டிவி, ரேடியோவுக்கு லைசென்ஸ் கட்டணம்-மத்திய அரசு திட்டம்
டெல்லி:டிவி மற்றும் ரேடியோவிற்கு உரிம கட்டணம் (லைசென்ஸ்) வசூலிப்பது குறித்து மத்திய அரசின் பிரச்சார் பாரதி நிறுவனம் ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து அமைச்சர் குழு கூட்டத்தில் நாளை விவாதிக்கப்படவுள்ளது.
தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ உள்ளிட்ட மத்திய அரசின் தொலைக்காட்சி, வானொலி சேவைகளை பிரச்சார் பாரதி நிறுவனம் நடத்தி வருகிறது. ஆனால், அதை தனியார் நிறுவனங்கள் போல திறம்பட நடத்தாதாலும் திறமை குறைவான ஊழியர்களை வைத்திருப்பதாலும் இந் நிறுவனம் கடும் நிதிப் பற்றாக்குறையில் சிக்கியுள்ளது. மத்திய அரசின் மானியத்தை வைத்துத் தான் பிழைப்பு ஓடிக் கொண்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் நிதித் தேவையை பூர்த்தி செய்ய மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.
இதன்படி புதிய வண்ணத் தொலைகாட்சி பெட்டி வாங்குபவர்களிடம் இருந்து தலா ரூ.500ம், கருப்பு-வெள்ளை தொலைகாட்சிப் பெட்டி வாங்குபவர்களிடமிருந்து ரூ.200ம் உரிம கட்டணமாக வசூலிக்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து நாளை நடைபெறும் அமைச்சரை குழு கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
மற்றொரு திட்டமாக வண்ணத் தொலைகாட்சி பெட்டியின் விலையில் 10 சதவீதத்தை உரிம கட்டணமாக வசூலிப்பது குறித்தும் பரிசீலிக்கப்படவுள்ளது. இதன் மூலம் பிரச்சார் பாரதி நிறுவனத்திற்கு வருடத்திற்கு ரூ.898 கோடி வருமானம் கிடைக்கும்.
தொலைகாட்சியை வாங்கும்போதே உரிம கட்டணத்தை வசூலித்தால் அதை வாடிக்கையாளர்கள் பெரிய சுமையாக நினைக்க வாய்ப்பில்லை. டிவி விலை ரூ. 500 அதிகம் என்று நினைத்து தந்துவிடுவார்கள்.
ஆனால், இதற்கு முன் டிவி வாங்கியவர்கள் அனைவரும் தனியாக லைசென்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அரசு ரூல் பேசினால் மக்களின் எரிச்சலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.
இதனால் தொலைகாட்சிப் பெட்டியின் உற்பத்தி வரியிலேயே ரூ.500 உரிம கட்டணத்தை சேர்த்துவிடலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது.
இதே போல் ரேடியோவிற்கும் லைசென்ஸ் கட்டணம் வசூலிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் இந்தியாவில் ரேடியோவுக்கு லைெசன்ஸ் கட்டணம் இருந்தது. அதை தபால் நிலையங்களில் செலுத்த வேண்டி இருந்தது. பின்னர் லைசென்ஸ் ரத்தானது.
இந் நிலையில் அதை மீண்டும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், ரேடியோவுக்கு கட்டணம் வசூலிப்பது அவ்வளவு எளிதல்ல. இப்போதெல்லாம் ரோட்டோரங்களில், பிளாட்பாரத்தில் கொட்டி வைத்து தான் ரேடியோக்களை கூவிக் கூவி விற்கிறார்கள். அவர்களிடம் பில் போட்டு லைசென்ஸ் கட்டணத்தை எப்படி வசூலிப்பது.
மேலும் ரேடியோ தயாரிப்பில் ஏகப்பட்ட சிறிய நிறுவனங்கள் இறங்கிவிட்டன. இவர்களுக்கு அலுவலகம் கூட கிடையாது. குடிசைத் ெதாழில் மாதிரி தான் ரேடியோ தயாரிக்கிறார்கள். பில் கிடையாது, கணக்கு கிடையாது, எதுவும் கிடையாது. இந் நிலையில் ரேடியோவின் விற்பனை விலையில் லைசென்ஸ் கட்டணத்தை சேர்ப்பது படு கஷ்டம்.
இதனால் கடைகளில் பில் போட்டு முறையாக வாங்குவோரை மட்டுமே லைசென்ஸ் கட்டணம் பதம் பார்க்க வாய்ப்புள்ளது.
பிரச்சார் பாரதி நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.3,000 கோடி தேவைப்படுகிறது. ஆனால், அதன் வருமானம் ரூ.1,600 கோடியாக மட்டுமே உள்ளது. தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் போல திறமையாக நடத்தினால் இத்தனை சேனல்களை வைத்துள்ள பிரச்சார் பாரதி லாபம் பார்க்கலாம். அதை விட்டுவிட்டு ஈசியாக காசு பார்க்கும் லைசென்ஸ் பீஸை பிரச்சார் பாரதி கையில் எடுத்துள்ளது சரியல்ல.












Click it and Unblock the Notifications