மருத்துவ கவுன்சிலிங்குக்குத் தடை நீக்கம்
சென்னை:மருத்துவ கவுன்சிலிங்குக்கு இன்று ஒரு நாள் விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது.
சென்னை மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் நேற்று மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கியது.
இந்த நிலையில், மரிய அருள் ரெக்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில் இந்த ஆண்டு தேறியவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கப்பட வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு தேறியவர்களும், வேறு படிப்புகளில் படித்துக் கொண்டிருப்பவர்களும் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.
இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று ஒரு நாள் மட்டும் கவுன்சிலிங்குக்குத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி ஷா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தலைமை வழக்கறிஞர் விடுதலை ஆஜராகி, கடந்த ஆண்டு நடத்தப்பட்டதைப் போலவே இந்த ஆண்டும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உத்தரவாதம் அளித்தார்.
இதை ஏற்ற தலைமை நீதிபதி, கவுன்சிலங் நடத்த விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டார். பின்னர் இன்று பிற்பகலுக்கு மேல் விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications