நக்ஸல்கள் அமைப்பு தலைவன், 2 பேர் திருப்பூரில் கைது
சென்னை:பெரியகுளம் வனப் பகுதியில் செயல்பட்டு வந்த நக்சலைட் கும்பலின் தலைவராகக் கருதப்படும் சுந்தரமூர்த்தி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் திருப்பூரில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே முருகமலை காட்டுப் பகுதியில் 3 நக்ஸலைட் தீவிரவாதிகள் பிடிபட்டனர். மற்ற 7 பேர் தப்பிவிட்டனர்.
நக்ஸலைட்டுகள் பெரும் அளவில் காட்டுப் பகுதிகளில் பதுங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் மாபெரும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
பெரியகுளம், கொடைகானல், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய காட்டுப் பகுதிகளில் இவர்கள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஏடிஜிபி விஜயகுமார் தலைமையில் சிறப்பு அதிரடிப் படையினர் தேடி வருகின்றனர்.
வனத்துறை, போலீஸ் அதிகாரிகள், கியூ பிராஞ்ச் போலீஸார் ஆகியோர் புதிய வியூகம் அமைத்து பல தனிப் படை பிரிவுகளை அமைத்து தேடி வருகின்றனர்.
இந் நிலையில் தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக வீரப்பன் வேட்டையில் ஈடுபட்டு அதற்காக பதவி உயர்வு பெற்று இப்போது பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் காவல்துறை அதிகாரிகளை இந்த பணியில் ஈடுபடுத்த விஜயகுமார் முடிவு செய்துள்ளார்.
இது குறித்து உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோருடன் விஜய்குமார் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து வீரப்பன் வேட்டையில் ஈடுபட்ட போலீஸார் பெரியகுளம் பகுதிக்கு வர வேண்டும் என விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
அவர்கள் அனைவரும் இன்று அல்லது நாளைக்குள் வந்து சேருவார்கள். பின்னர் நக்ஸலைட்டுகள் வேட்டையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு நக்சலைட் கும்பலின் தலைவனாக கருதப்படும் சுந்தரமூர்த்தி என்பவர் உள்ளிட்ட 3 பேரை கியூ பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து சென்னையில் இன்று கியூ பிரிவு கூடுதல் டிஜிபி நாஞ்சில் குமரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருப்பூர் கிச்சம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் சிலர் பதுங்கியிருப்பதாக கியூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதைடுயடுத்து விரைந்து சென்ற போலீஸார் பதுங்கியிருந்த 3 பேரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் நக்சலைட் கும்பலின் தலைவனாக கருதப்படும் சுந்தரமூர்த்தி அவனது கூட்டாளிகள் கார்த்திக், ஈஸ்வரன் ஆகியோர் என்பது தெரிய வந்தது.
இந்த கார்த்திக்தான் கொடைக்கானலில் தங்கி நக்சலைட்டுகளை ஒருங்கிணைக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தார். இவரது வீட்டில்தான் சுந்தரமூர்த்தியும் தங்கியிருந்தார்.
சுந்தரமூர்த்தி மீது கொலை, கொலை மிரட்டல், பொதுமக்களை அச்சுறுத்தியது தொடர்பாக 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் நக்சலைட் அச்சுறுத்தல் எதுவும் இல்லை. மொத்தமே 10 பேர்தான் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்றார் குமரன்.
இதற்கிடையில் தீவிரவாதிகள் கேரளா பகுதிக்கு தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதால் கேரளா எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications