4 தொகுதிகளில் போட்டி: ஜெ. மீதானவழக்குகளை நிறுத்தி வைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி:நான்கு சட்டசபைத் தொகுதிகளில் போட்டியிட்டது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது புதுக்கோட்டை மற்றும் பரங்கிப்பேட்டை நீதிமன்றங்களில் தேர்தல் ஆணையம் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு நான்கு தொகுதிகளில் போட்டியிட்டது தொடர்பாக ஜெயலலிதா மீது வழக்குப் பதிவு செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று புவனகிரி தேர்தல் அதிகாரி பரங்கிப்பேட்டை நீதிமன்றத்திலும், புதுக்கோட்டை தேர்தல் அதிகாரி, புதுக்கோட்டை நீதிமன்றத்திலும் நேற்று வழக்குத் தாக்கல் செய்தனர்.
இந் நிலையில் இன்று ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்குகளை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் தற்போது உள்ள நிலையே நீடிக்க வேண்டும். தற்காலிகமாக அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்த மனு தொடர்பாக தேர்தல் ஆணையம், திமுக எம்.பி. குப்புசாமிக்கு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு வருகிற 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications