மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96 அடியாக உயர்வு
மேட்டூர்:மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96 அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடகத்தில் பருவமழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி ஆகிய அணைகள் நிரம்பியுள்ளன. இவற்றிலிருந்து உபரி நீர் காவிரியில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 96 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 28,366 கன அடியாக உள்ளது.
இதனால் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியிலும் தண்ணீர் பெருக்கு அதிகரித்துள்ளது. அபாயகரமான அளவில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பரிசல்கள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள நடைபாதைக்கு 2 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் சென்றுக் கொண்டிருக்கிறது.
![]() |
இந் நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்றே 35,000 கன அடியாக அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கர்நாடகவிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவுக் குறித்து பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்ப்பாசன பொறியாளர் சேஷாத்திரி தலைமையிலான அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
10 நாள் முன்னறிவிப்புக்கு பின் அணை திறப்பு:
முன்னதாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் 95 அடியாக உயர்ந்தும், 10 நாட்கள் முன்னறிவிப்பிற்குப் பிறகே திறக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் நேற்று தமிழக அரசு அறிவித்தது.
காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடவேண்டுமென அரசு உத்தரவிட கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கருப்பன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா மற்றும் நீதிபதி ஜோதிமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில், மேட்டூர் அணை நீர்மட்டம் 95 அடியாக வந்ததும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் கருப்பன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இதையடுத்து, முதல்வர் கருணாநிதி வரும் 25ம் தேதிதான் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் வழக்கறிஞர் கருப்பன் நேற்று காலை நீதிபதிகள் ஷா மற்றும் ஜோதிமணி முன்னிலையில் ஆஜராகி, மேட்டூர் நீர்மட்டம் 95 அடி தொட்டதும் அணையை திறப்பதாக அரசு கூறியது. ஆனால் தற்போது முதல்வர் கருணாநிதி வரும் 25ம் தேதிதான் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் எனக் கூறுகிறார்.
ஏற்கனவே நீர் நிலை நிபுணர் மோகன் கிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜராகி 95 அடி உயர்ந்ததும் விவசாயித்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் என கூறினார். தற்போது தஞ்சை, திருச்சியிலுள்ள குறுவை சாகுபடி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அணையை திறக்க நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் எனக் கூறினார்.
இதை கேட்ட நீதிபதிகள், இதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதையடுத்து அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜா கலிபுல்லா நீதிமன்றத்தில் ஆஜராகி கூறியதாவது,
அணையின் நீர்மட்டம் 95 அடியை எட்டியதும், எப்போது அணையை திறந்துவிடப் போகிறோம் என விவசாயிகளுக்கு 10 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிடுவோம். இப்போது அணையை திடீரென திறந்து விட்டால் நீர் வீணாக கடலில் சென்று கலந்து விடும் என்றார்.
அரசு தரப்பில் கூறப்பட்ட கருத்துகளை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.
ஆனால் வழக்கறிஞர் கருப்பன், நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை அரசு மீறியுள்ளதால், அரசு மீது அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப் போவதாகக் கூறியுள்ளார்.
பாசனத்திற்கு வைகை அணை திறப்பு:
இதற்கிடையில் மதுரை, திண்டுக்கல் பகுதி பாசனத்திற்காக வைகை அணை இன்று திறக்கப்படவுள்ளது.
இந்த அணைக்கு வைகை ஆறு, முல்லைப் பெரியாறு, போடி கொட்டகுடி ஆறுகள் மூலம் நீர் வரத்து இருந்து வருகிறது. அணையின் நீர் அளவைப் பொறுத்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் பாசனத்திற்காக திறந்து விடப்படும். இந்த வருடம் அணையில் நீர் போதுமான இல்லாததால் திறக்கப்படவில்லை.
இப்போது முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரால் வைகை அணை நிரம்பி வருகிறது. 71 அடி உயரமுள்ள இந்த அணையில் நீர்மட்டம் நேற்று 44.36 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 137 அடியாக உள்ளது.
இதையடுத்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் விவசாய நிலங்களுக்கு முதல் போகத்திற்கு இன்று அணை திறக்கப்படும் என தேனி மாவட்ட ஆட்சியாளர் ஹர்சகாய் மினா அறிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications