தமிழகத்தில் வன்முறை கலாச்சாரம் - இளங்கோவன்
சென்னை: தமிழ்நாட்டில வன்முறை, கலவரங்கள் அதிகளவு நடந்து வருவதாக மத்திய அமைச்சர் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
காமராஜரின் 105வது பிறந்த நாள் விழாவில் பேசிய மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்,
தமிழகத்தில் வன்முறையும், கலவரங்களும் தலைதூக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதற்கு முன்பு வன்முறை என்றால் அரிவாள் வீச்சு, வெட்டுக்குத்து, தாக்குதல் என்றுதான் இருந்தது. ஆனால் தமிழகம் நன்றாக தேர்ச்சி பெற்று விட்டது.
அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் தான் குண்டு வெடிப்பு நடப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் தமிழ்நாடு, அஸ்ஸாமை விட குண்டு வெடிப்பு தாக்குதலில் பல மடங்கு முன்னேறியுள்ளது என்பதற்கு சிறந்த உதாரணம் சிவகங்கை ரிமோட் கார் குண்டு வெடிப்பு.
இதை நான் ஏன் குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால், இதில் பாதிக்கப்பட்டவரும், பாதிப்பை உண்டாக்கியவரும் தமிழகத்தின் ஒரே கட்சியை (திமுகவினர்) சேர்ந்தவர்கள் என்பது தான். இதே போன்று பல வன்முறைகள் தினமும் அரங்கேறிய வண்ணம் தான் இருக்கிறது.
இத்தகைய வன்முறைகளை ஆளும் திமுக அரசு ஒழிக்க வேண்டும். இைதச் செய்ய முதல்வர் கருணாநிதியால் மட்டுமே முடியும்.
காமராஜரின் பிறந்த நாளையொட்டி சத்துணவில் வாரம் 3 முட்டை திட்டத்தை அமல்படுத்தியதற்கு அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழகத்தில் கல்வி குழப்ப நிலையில் உள்ளது. 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளியிலேயே இடம் கொடுக்க மறுக்கிறது பள்ளி நிர்வாகம்.
உயர்கல்வி படிப்புகளில் மாணவர் சேர்க்கை தொடர்பான பிரச்சனையில் நீதிமன்றம், அரசு அறிவித்ததை ஏற்க மறுத்துள்ளது. இதில் மாணவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். இதை மாற்ற அரசுக்கு புதிய கல்வி கொள்கை கட்டாயம் தேவை.
இன்று தமிழகம் சொர்க்க பூமியாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் காமராஜர் தான் என்பதை மறக்க கூடாது.
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை விமர்சியுங்கள், நாங்கள் அதற்கு பதில் அளிப்போம். அதைவிட்டு தனிப்பட்ட முறையில் எங்கள் தலைவி சோனியாகாந்தி அவர்களை விமர்சிக்க ஜெயலலிதா போன்றோருக்கு தகுதி கிடையாது என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications