பாஸ்போர்ட் விசாரணை: காவல் நிலையத்தை முற்றுகையிட முடிவு...உடனடி தீர்வு
திருநெல்வேலி:
-இசக்கி ராஜன்
திருநெல்வேலியில் வெளிநாடு செல்ல விண்ணப்பித்த இளைஞர்களின் பாஸ்போர்ட் விண்ணப்பம் குறித்து விசாரணை செய்யாத காவல்துறையை கண்டித்து, போராட்டம் நடத்த அவர்கள் திட்டமிட்டனர். இதையடுத்து காவல்துறையினர் உடனடியாக விண்ணப்பங்கள் குறித்து விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் தென்காசியில் சில மாதங்களுக்கு முன்பு இந்து முன்னணி பிரமுகர் குமார் பாண்டியன் என்பவரை 3 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இக்கொலை தொடர்பாக குற்றவாளிகள் கைது செய்யபட்டனர்.
இதை தொடர்ந்து இப்பகுதி பதட்டமாகவே இருந்து வந்தது. இந் நிலையில் த.மு.மு.க. பிரமுகர் மைதீன் சேட்கான் என்பவரை ஒரு கும்பல் வெட்டியது. இதில் அவர் உயிர் தப்பிவிட்டார். இந்த இரு சம்பவங்களால் பல்வேறு அசம்பாவிதங்கள் இப்பகுதியில் நடந்தேறியவண்ணம் உள்ளன. கலவரத்தில் ஈடுபட்டதாக இரு தரப்பிலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இரு சம்பவங்களுக்குப்பின் தென்காசி பகுதியில் பல இஸ்லாமிய இளைஞர்கள் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்துள்ளனர். அந்தப் படிவங்களை திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் காவல்துறையினரின் விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் காவல் துறையினர் இந்த விண்ணப்பதாரர்கள் குறித்து விசாரிக்காமல் இருந்து வந்தனர்.
இதையடுத்து தென்காசியை சேர்ந்த இஸ்லாமி இளைஞர்கள் தென்காசி காவல் நிலையத்தை முற்றுகையிட முடிவு செய்தனர். இத்தகவலை அறிந்த உளவு பிரிவினர் உயர் அதிகாரிகளுக்கு தகவலை தெரிவித்தனர்.
இதையடுத்து அவசர, அவசரமாக சம்பந்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களிடம் காவல்துறையினர் பேசி சமாதான முயற்சியில் இறங்கினர். இதையடுத்து தேக்கத்தில் இருந்த விண்ணப்பங்களை விசாரணை செய்து பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications