மாஞ்சோலை நினைவு தினம்: நெல்லையில் பேரணி
மதுரை:
நெல்லையில், மாஞ்சோலைத் தொழிலாளர்கள் 17 பேர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பலியான சம்பவத்தின் 9வது ஆண்டு நினைவு தினமான ஜூலை 23ம் தேதி நெல்லையில் பேரணியும், பொதுக் கூட்டமும் நடத்தப்படும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த 1999ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டனர்.
அந்த துயரச் சம்பவத்தின் 9வது ஆண்டு நினைவு தினம் வருகிற 23ம் தேதி தொழிலாளர் மீட்பு தினமாக அனுசரிக்கப்படும்.
இதையொட்டி தாமிரபரணி ஆற்றில் 17 தியாகிகளின் நினைவாக மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து இரண்டு எம்.பிக்கள் கலந்து கொள்கின்றனர்.
அன்றைய தினம் இரங்கல் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெறும் என்றார் கிருஷ்ணசாமி.
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை கிராமத்தில் உள்ளது பாம்பே-பர்மா வர்த்தக கழகம். இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றிய ஊழியர்கள் கூடுதல் ஊதியம் கேட்டுப் போராடினார்கள்.
தங்களது கோரிக்கைய வலியுறுத்தி 1999ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி நெல்லையில் பேரணி நடத்தினர். அப்போது போலீஸார் திடீரென துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர். இதையடுத்து அலறி ஓடிய தொழிலாளர்களில் பலர் தாமிரபரணி ஆற்றில் விழுந்தனர். அவர்களில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சோக நிகழ்ச்சியை புதிய தமிழகம் கட்சி ஆண்டுதோறும் பேரணி, பொதுக் கூட்டத்துடன் அனுசரித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications