கொட்டும் மழையில் ஓட ஓட விரட்டிமந்திரவாதி வெட்டிக் கொலை
சென்னை:சென்னை தண்டையார்பேட்டையில், மந்திரவாதி ஒருவர் கொட்டும் மழையில் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பீதி நிலவுகிறது.
தண்டையார்ப்பேடையில் உள்ள நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ஷேக் பரீத் (37). இவர் மந்திர, தந்திரங்கள் தெரிந்தவர் என்பதால் அவரிடம் பலரும் மந்திராலோசனை பெற வருவார்களாம்.
கொருக்குப்பேட்டையில் இதற்காக ஒரு அலுவலகம் அமைத்து மந்திர ஆலோசனை சொல்லி வந்தார் பரீத். இவருக்கு ஷெரீனா பானு என்கிற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
மாலை 5 மணிக்கு தனது அலுவலகம் சென்று இரவு 10 மணிக்கு வீடு திரும்புவாராம் பரீத்.
ஷேக் பரீத் வசித்து வந்த நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.
ஏதோ ஒரு பிரச்சினைக்காக ஷர்மிளா, ஷேக் பரீத்திடம் ஆலோசனை கேட்க வந்தார். அப்போது அவரது அழகியில் மயங்கி பரீத், தனது மந்திரப் பேச்சால், ஷர்மிளாவை தன் பக்கம் இழுத்துக் கொண்டார். இருவரும் சில காலமாக நெருங்கிப் பழகி வந்தனர்.
இந்த நிலையில் ஷர்மிளா, ஷேக் பரீத்தின் தொடர்பு ஷர்மிளாவின் கணவர் நைனார் முகம்மதுவுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து அவரும், ஷர்மிளாவின் சகோதரர்கள் ரஷீத் இக்பால், ரஹமத்துல்லா ஆகியோர் ஷர்மிளாவைக் கண்டித்துள்ளனர்.
ஆனால் ஷர்மிளா அதைக் கண்டுகொள்ளாமல் தனது குழந்தையை நைனார் முகம்மதுவின் வீட்டில் விட்டு விட்டு நிரந்தரமாக ஷேக் பரீத்துடன் குடும்பம் நடத்த ஆரம்பித்தார்.
இதனால் நைனார் முகம்மது கொதிப்படைந்தார். நேற்று இரவு பத்தரை மணியளவில் ஷேக் பரீத் தனது அலுவலகத்தை மூடி விட்டு வீட்டுக்குக் கிளம்பினார். அப்போது நல்ல மழை. மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த ஷேக் பரீத்தை, ஒரு மர்மக் கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியது.
இதை எதிர்பார்க்காத பரீத் அங்கிருந்து தப்பி ஓடினார். கொட்டும் மழையில் அந்தக் கும்பல் ஷேக் பரீத்தை விரட்டி விரட்டி சரமாரியாக வெட்டித் தள்ளியது. இதில் ஷேக் பரீத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கன மழை பெய்ததால் தெருவில் யாரும் இல்லாதது கொலைகாரர்களுக்கு வசதியாகப் போய் விட்டது. மழை நின்ற பின்னர் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். அப்போது ஒருவர் பிணமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்த அவர்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
ஷர்மிளாவின் கணவர் மற்றும் சகோதரர்கள் ஏவி விட்ட கூலிப் படை ஷேக் பரீத்தைக் கொன்றதா அல்லது வேறு காரணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஷேக் பரீத்துக்கு ஷர்மிளா தவிர வேறு சில பெண்களுடனும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அந்தப் பெண்கள் தொடர்பானவர்கள் ஷேக் பரீத்தைக் கொன்றிருக்கக் கூடும் என்ற சந்தேகத்திலும் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications