ஹனீப் விசா ரத்து: ஆஸி.க்கு இந்தியா கண்டனம்
டெல்லி:பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் முகம்மது ஹனீப்பின் விசாவை ரத்து செய்து அவரை வெளியே வர விடாமல் தடுத்து காவலில் வைத்துள்ள செயலுக்காக ஆஸ்திரேலிய அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜாமீனில் விடுதலையான சில மணி நேரங்களிலேயே முகம்மது ஹனீப்பை ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை அதிகாரிகள் தங்களது காவலுக்குக் கொண்டு சென்று விட்டனர். அவரது விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அரசின் இந்த செயல் ஹனீப் குடும்பத்தினரை மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பிலும் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஹனீப் விவகாரம் குறித்து இந்தியா கண்டனமும், அதிருப்தியும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், டாக்டர் ஹனீப்பை ஆஸ்திரேலிய சட்டப்படி நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தும்படி ஆஸ்திரேலிய தூதரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹனீப் விவகாரத்தில் தற்போது நடந்து வரும் நிகழ்வுகள் கவலை அளிப்பதாக உள்ளன.
கான்பெராவில் உள்ள இந்திய தூதரகம் ஹனீப் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஹனீப் குடும்பத்தினருக்குத் தேவையான சட்டப்பூர்வ உதவிகளை அளித்து வருகிறது என்றார் அவர்.
இதற்கிடையில், ஹனீப் விசா ரத்து செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்வார். இந்தியா திரும்பும் வகையில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ஹனீப்பிற்கு ஜாமீன் கையெழுத்து போட ஒருவர் தயாராக இருக்கிறார் என ஹனீப்பின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஹனீப் ஜாமீன் பெற்றால் அவர் சொந்த நாடு செல்வதில் தடை எதுவும் இருக்காது என குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹனீப் விவகாரத்தில், ஆஸ்திரேலிய அரசின் போக்குக்கு அங்கு பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல்வேறு மனித உரிமை அமைப்புகள், சட்ட நிபுணர்கள், அரசியல் கட்சிகள், அரசின் போக்குக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறது, இன துவேஷத்தையே இது பிரதிபலிக்கிறது என்று பல பத்திரிக்கைகளில் செய்திகளும் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications