கோடநாடு: பில்டிங் பிளானை தாக்கல் செய்யஜெ. தரப்புக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை:கோடநாடு எஸ்டேட் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தின் வரைபடத்தையும் (பில்டிங் பிளான்), பிற ஆவணங்களையும் தாக்கல செய்யுமாறு எஸ்டேட் மேலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் வளாகத்தில் அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் எஸ்டேட்டுக்குள் நுழைந்து ஆய்வும் நடத்தினர். இதை எதிர்த்து கோடநாடு எஸ்டேட் மேலாளர் ரவிச்சந்திரன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், கோடநாடு எஸ்டேட் வளாகத்திற்குள் ஆடம்பர மாளிகை கட்டப்பட்டுள்ளதாகவும், அதில் 90 அறைகள் உள்ளதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் எஸ்டேட்டுக்குள் பல ஆண்டுளாக கட்டடம் உள்ளது. இதற்கான முறையான வரைபடம் உள்ளது. ஆனால் பஞ்சாயத்து சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி குலசேகரன் விசாரித்தார். அப்போது கேடாநாடு பஞ்சாயத்துத் தலைவர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் சார்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பின்னர் இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த மார்ச் 27ம் தேதி கோடநாடு பஞ்சாயத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகல் தாக்கல் செய்யப்பட்டது.
இரு தரப்பு ஆவணங்களையும் பரிசீலித்த நீதிபதி, கட்டட வரைபடம் மற்றும் பிற ஆவணங்களை வருகிற ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications