து.ஜனாதிபதி: 3வது அணியின் வேட்பாளர்சமாஜ்வாடி எம்.பி. ரஷீத் மசூத்
மும்பை:குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக சமாஜ்வாடிக் கட்சி எம்.பியான ரஷீத் மசூத் அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக 3வது அணி அறிவித்து விட்டது. துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தனி வேட்பாளரை நிறுத்தப் போவதாகவும் அறிவித்தது.
துணை குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத்தின் பதவிக் காலம் அடுத்த மாதம் 18ம் தேதி முடிகிறது. இதற்கான தேர்தல் ஆகஸ்ட் 10ம் தேதி நடக்கிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 23ம் தேதி கடைசி நாள்.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி, இடதுசாரிகள் சார்பில் யார் போட்டியிடுவார் என்பது தெரியவில்லை. பாஜக கூட்டணி சார்பிலும் யார் போட்டியிடப் போவது என்பது தெரியவில்லை.
இந் நிலையில் முதல் நபராக 3வது கூட்டணியின் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாடிக் கட்சி எம்.பியான ரஷீத் மசூத், 3வது அணியின் சார்பில் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷீத் மசூத் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார். வி.பி.சிங் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். பின்னர் ஜனதா தளத்திலிருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்தார். பிறகு அதைக் கலைத்து விட்டு முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடிக் கட்சியில் இணைந்தார்.
உ.பி. மாநிலம் சஹாரன்பூர் தொகுதியிலிருந்து ஐந்து முறை லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ரஷீத் மசூத் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட விவரத்தை மும்பையில் சமாஜ்வாடிக் கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ரஷீத் மசூத்தை வேட்பாளராக்குவது குறித்து ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்டது.
இவர் இதுவரை எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர். அனுபவமிக்க அரசியல்வாதியான இவர் பல சிறப்புக்களை பெற்றுள்ளவர்.
நாங்கள் வேறு சிலரின் பெயர்களையும் பரீசலித்தோம். ஆனால் ஒருவரை தேர்ந்தெடுத்த பின்பு பரீசலித்த பெயர்களை சொல்வது நாகரீகமல்ல.
இடதுசாரிகட்சிகளிடம் ரஷீத் மசூத் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து தெரிவித்துள்ளோம். ஏனென்றால் இடதுசாரி கட்சிகளுடன் எங்களுக்கு ஆரம்பித்தில் இருந்தே தொடர்பு உண்டு.
காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக இடதுசாரிகள் ஆதரிப்பார்கள் என்பது தெரிந்த விஷயம் தான் என்று தெரிவித்தார் அமர்சிங்.
விரைவில் மசூத் வேட்பு மனு தாக்கல் செய்வார். அப்போது சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா, முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட கூடடணித் தலைவர்கள் உடன் இருப்பர்.
எங்களது வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு நாங்கள் யாரையும் கேட்க மாட்டோம்.
ஓட்டுப் போடாமல் இருக்கக் கூடாது என்று பாஜக கூறியுள்ளது வியப்பாக உள்ளது. ஓட்டுப் போடுவதும், போடாமல் இருப்பதும் அவரவர் இஷ்டம். எங்களது கூட்டணியின் முடிவை பாஜக விமர்சித்திருப்பது தேவையற்றது என்றார் அமர்சிங்.
இதன்மூலம் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலின் முதல் வேட்பாளரை அறிவித்த பெருமையை ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications