டிக்கெட் பரிசோதகர்களுக்கு பயணிகள் தர்ம அடி
சென்னை:டிக்கெட் வாங்காமல் பயணம் செய்த பயணியை தேவையில்லாமல் அடித்த, டிக்கெட் பரிசோதகர்களை மற்ற பயணிகள் ஒன்று சேர்ந்து தர்ம அடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (26). சென்னையில் நடந்த வேலை வாய்ப்பு முகாமுக்கு வந்திருந்த அவர் தாம்பரம் வந்தார். அங்கிருந்து ஒரு டவுன் பஸ்சில் ஏறினார்.
டிக்கெட் வாங்காமல் பேருந்தில் அவர் பயணித்துள்ளார். அப்போது டிக்கெட் பரிசோதகர்கள் ராஜமாணிக்கம், கங்காதரன் ஆகியோரிடம் அவர் சிக்கினார்.
அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக அவர் ஓடியுள்ளார். அப்போது டிக்கெட் பரிசோதகர், இன்ஸ்பெக்டர் மற்றும் அவர்களுடன் வந்த விமலேஷ் என்ற வாலிபர் ஆகியோர் அவரை விரட்டிப் பிடித்தனர்.
பின்னர் மூன்று பேரும் சேர்ந்து ராஜாவை அடிக்க ஆரம்பித்தனர். இதைப் பார்த்த பொதுமக்களும், பயணிகளும் கடுப்பாகி விட்டனர். இதையடுத்து அனைவரும் சேர்ந்து ராஜாவை போட்டு அடித்த மூன்று பேரையும் சுற்றி வளைத்து சரமாரியாக தர்ம அடி கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலையூர் போலீஸார் ராஜாவை கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். டிக்கெட் எடுக்காமல் பயணித்தற்காக அவருக்கு ரூ. 300 அபராதம் விதிக்கப்பட்டது.
பரிசோதகர்களுடன் வந்த விமலேஷ் என்பவர் அவர்களுடனேயே செல்வாராம். அவருக்கும், போக்குவரத்துத் துறைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதாம். பிறகு எதற்காக இவரையும் பரிசோதகர்கள் இருவரும் உடன் அழைத்துச் சென்றனர் என்பது குறித்து போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications